முகாம்களில் உள்ள தமிழரை விடுவிக்கக் கோரி லயோலா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
சென்னை: வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கான முழு உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.'இலங்கைத் தமிழர் உரிமைகளுக்குக் குரல் கொடுப்போம், உதவிக் கரம் நீட்டுவோம்' என்ற முழக்கத்துடன் அம்மாணவர்கள் இந்த போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
லயோலாக் கல்லூரி மாணவர் ஒன்றியம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் இலங்கையின் வடபகுதியில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை தொடர்பாக மாணவர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறியதுடன், ஈழத் தமிழர்களின் விடிவுக்காக தமிழ் மாணவர்கள் மற்றும் தாயகத் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கினார்.
அதன் பின்னர் கல்லூரி முன்றலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருரோடு ஒருவர் கைகோர்த்து நின்று மனிதச் சங்கிலிப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
"உடைமை இழந்து வந்தவர்களின் உயிரையும் வதைப்பதா"
"தமிழர் உரிமையை நிலைநாட்டு"
"புத்தம் பேசும் சிங்களரே யுத்தம் புத்தம் சொன்னதா"
"ஐ.நா. சபையே தலையீடு செய்"
"இந்திய அரசே, ஈழத் தமிழர்களுக்கு நிவாரணம் கொடு"
"தமிழக அரசே, தமிழனை இழிவுபடுத்தாதே"
போன்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் தாங்கியிருந்தார்கள்.
ஈழத் தமிழர்களின் அவல நிலை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன், வீதியில் சென்ற மக்களுக்கு "எங்களைக் காத்திடுங்கள்" என்ற தலைப்பில் அமைந்த துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தார்கள்.
அதில் இலங்கைத் தமிழர்களின் பூர்வீக வரலாறு, இலங்கைத் தமிழரின் இன்றைய நிலை, உள்நாட்டிலேயே அகதிகளான (முகாம்) மக்களின் நிலை, உடனடி நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகள் என்பன விளக்கப்பட்டிருந்தன.
மேலும் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யவேண்டி நிதி சேகரிக்கும் பணியை இந்திய ஏசு சபையினர் தொடங்கியுள்ளனர்.
"மனித மாண்பும் நியாயமான உரிமைகளும் இழந்து, உடல் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு அவதியுறும் நம் தமிழ்ச் சொந்தங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவோம். தாராள நிதி உதவி செய்திடுவோம்" என ஏசு சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உதவிகளை பொருளாளர், நிவாரண சீரமைப்பு பணி, லயோலா கல்லூரி, சென்னை - 600034 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
லயோலா கல்லூரியை ஏசு சபையினர்தான் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.