திருவல்லிக்கேணி கோவிலில் நவராத்திரி லட்சார்ச்சனை
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவிலில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ வேதவல்லி தாயாருக்கு தனி சன்னதி இருப்பது முக்கிய அம்சமாகும். இதையடுத்து இங்கு நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் சீரும், சிறப்புமாக கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீவேதவல்லி தாயார் தினமும் ஒரு வாகனத்தில் எழுந்தருளுகிறார். முதல் நாள் தாமரை வாகனம், மறுநாள் கிளி வாகனம், மூன்றாவது நாள் சேஷ வாகனத்தில் வரும் அவர் 4ம் நாள் யாளி வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
5ம் நாள் மீண்டும் தாமரை வாகனத்திலும், 6ம் நாள் குதிரை வாகனம், 7ம் நாள் ஹம்ச வாகனம், 8ம் நாள் யானை வாகனத்திலும் உற்சவம் காண்கிறார்.
9ம் நாள் ஸ்ரீவேதவல்லித் தாயார், ஸ்ரீரங்கநாதருடன் எழுந்தருளுகிறார்.
இதுகுறித்து கோவில் துணை ஆணையர் ஜெயராமன் கூறுகையில்,
நவராத்திரி காலமான 9 நாட்களிலும் கோவில் நிர்வாகம் இலட்சார்ச்சனைக்கு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்கள் ரூ.100 செலுத்தி பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.
கலந்து கொள்ளும் அனைவருக்கும் வேதவல்லித்தாயாரின் திருவுருவப்படம், குங்குமப் பிரசாதம், லட்டு, வடை, துணிப்பை வழங்கப்படும் என்றார்.