ஒகேனக்கலில் வெள்ளம் - சுற்றுலா குளிக்கத் தடை!
ஒகேனக்கல்: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் கிடுகிடுவென நிரம்பி வருகின்றன.
கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்று பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
தமிழக - கர்நாடக எல்லையான பிலி குண்டுலுவில் இருந்து மேட்டூர் வரை உள்ள காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பஞ்சப்பள்ளி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 50 அடி ஆகும்.
கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக இந்த அணையின் நீர்மட்டம் 48 அடி யாக உயர்ந்தது. இதனால் அணைக்கு வரும் நீர் அப்ப டியே திறந்துவிடப்படுகிறது.
இந்த உபரி நீரும் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் வந்து சேரும். ஏற்கனவே ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் கொட்டி வருகின்றது.
ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஒகேனக்கல் நடை பாலம் வழியாக பொது மக்கள் செல்லவும் , காவிரி ஆற்றில் பயணிகள் பரிசலில் செல்லவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.