மரக்கன்று நடுதல் இந்தியாவுக்கு 9வது இடம்-ஐநா
நியூயார்க்: உலக அளவில் அதிக மரக்கன்றுகளை நட்ட நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 9வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இது புவிவெப்ப மயமாதலை தடுக்க இந்திய மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியை காட்டுகிறது.
கடந்த நவம்பர் 2006ம் ஆண்டு ஐநாவின் சுற்றுப்புற சூழல் அமைப்பு உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 100 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டது.
மேலும், மக்கள், சுற்றுப்புற ஆர்வலர்கள் மற்றும் அரசு தாங்கள் நடும் மரக்கன்றுகளை கணக்கு வைக்குமாறு கேட்டு கொண்டது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததைவிட மரக்கன்றுகள் அதிகளவில் வேகமாக நடப்பட்டு வருகிறது.
2007 நவம்பரில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் ஐநா தனது இலக்கை நெருங்கியது தெரியவந்தது. 100 கோடியாவது மரம் எதியோப்பியாவில் நடப்பட்டது. அது ஐநாவின் சின்னத்தில் இலைகளாக காட்சி தரும் ஆலிவ் மரமாகும்.
இதே திட்டத்தை ஐநா உலகம் முழுவதும் சுமார் 167 நாடுகளில் செயல்படுத்தி வருகிறது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்ச்சி பிரசாரம் காரணமாக மே 2008ல் அது 200 கோடியை தொட்டது. இதையடுத்து ஐநா ஒரு மனிதருக்கு ஒரு மரம் என்ற விகிதத்தில் 700 கோடி மரக்கன்றுகளை நட புதிய இலக்கை நிர்ணயித்தது.
இந்தியாவில் 100 கோடி மரத்தை நட திட்டமிட்டது. இது இந்த ஆண்டு இந்தியாவில் 96 கோடி ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் உலகம் முழுவதும் அது 400 கோடியை எட்டியுள்ளது.
இந்நிலையில் சுற்றுப்புற சூழல் திட்டத்துக்கான ஐநா அதிகாரி ஒருவர் கூறுகையில்,
உலக அளவில் அதிக மரங்களை நடும் நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. ஆனால், இந்தியா இன்னும் சிறந்த இடத்தை பிடித்திருக்க முடியும்.
ஆனால், பலரும் தாங்கள் மரக்கன்றுகளை நட்டியதை கணக்கில் காட்டவில்லை. இந்தியாவில் எப்படியும் குறைந்தது 100 கோடி மரக்கன்றுகளாவது நடப்பட்டிருக்கும். ஆனால் 96 கோடி தான் கணக்கில வந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications