திருச்சி, தஞ்சாவூரில் விரைவில் சுற்றுலா ஆட்டோ
திருச்சி: தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் திருச்சி மற்றும் தஞ்சாவூரில் விரைவில் சுற்றுலா பயணிகளுக்கு நண்பனாக திகழும் ஆட்டோக்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.
இந்த வகையான ஆட்டோக்கள் திருச்சியில் 26, தஞ்சாவூரில் 16 அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இவை அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவக்கப்படும் என தமிழக சுற்றுலா வளர்ச்சி துறையின் மக்கள் தொடர்பு மேலாளர் ரவி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
மற்ற ஆட்டோக்களில் இருந்து பார்ப்பதற்கே வித்தியாசமாக அழகாக இருக்கும் இந்த ஆட்டோக்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். மேலும் ஆட்டோவின் பின்புறத்தில் தமிழக சுற்றுலா துறையின் சின்னம் அச்சிடப்பட்டிருக்கும்.
இந்த ஆட்டோக்களில் மீட்டர் படி பணம் வசூல் செய்யப்படும். மேலும் இதில் பாயிண்ட் டூ பாயிண்ட், அரை நாள் வாடகை மற்றும் முழு நாள் வாடகைகளிலும் பயணிகளின் வசதிக்கேற்ப கிடைக்கும்.
இந்த ஆட்டோ டிரைவர்களுக்கு அடையாள அட்டையும், சான்றிதழும் உள்துறை அமைச்சகம் மூலம் வழங்கப்படும்.
திருச்சியில் இதுவரை 35 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவற்றை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சரிபார்க்க அனுப்பியுள்ளோம். இதை தொடர்ந்து போலீஸாரால் விசாரிக்கப்படும். அந்த அறிக்கைகளின் பேரில் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கும்.
அவர்களுக்கு ஏற்கனவே பயணிகளிடம் எப்படி நடந்து கொள்வது, எப்படி பேசுவது போன்றவை குறித்த பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்டோ டிரைவர்களுக்கு சுற்றுலான தொடர்பான புத்தகம் மற்றும் நகரத்தின் வரைபடம் ஆகியவை கொடுக்கப்படும்.
சுற்றுலா பயணிகளுக்கு ஆட்டோ டிரைவரின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளுக்கு கொடுக்கப்படும். இந்த திட்டத்தில் சேரும் ஆட்டோ டிரைவர்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் மற்றும் மருத்துவ பரிசோதனை திட்டமும் அளிக்கப்படும்.