கொல்கத்தா விமான நிலையத்தில் 6 மணி நேரம் சண்டை போட்ட தம்பதி

இந்த புருஷன் - பொண்டாட்டி சண்டையை நூற்றுக்கணக்கானோர் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். வாக்குவாதம், ஒருவரை ஒருவர் தள்ளி விடுவது, கடுமையாக திட்டிக் கொள்வது என பல்வேறு வகைகளில் இந்த சண்டைக் காட்சி இருந்தது.
இந்த சண்டையின் விளைவாக அந்தப் பெண்மணி தான் போக வேண்டிய விமானத்தை தவற விட்டார்.
அந்தப் பெண் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு வெளிநாடு வாழ் இந்தியரை கல்யாணம் செய்து கொண்டுள்ளார். கேப் டவுன் நகரில் இவர்கள் வசித்து வருகின்றனர்.
நேற்று காலை அந்த பெண்மணி கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்தார். தனது மாமனார், மாமியாரை முதல் முறையாக பார்ப்பதற்காக அவர் வந்துள்ளார். ஆனஆல் வந்த சில நேரங்களிலேயே அவருக்கும், கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவை விட்டுக் கிளம்ப அவர் தீர்மானித்தார்.
இதையடுத்து மாலை 3.45 மணிக்கு மும்பை செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்தார். ஆனால் மருமகள் வந்த தகவல் தெரிந்து அவரது மாமனாரும், மாமியாரும் விமான நிலையத்திற்கு வந்தனர். மருமகள் மும்பை செல்லத் திட்டமிட்டுள்ளதை அறிந்து போகக் கூடாது என்று கூறித் தடுத்தனர். கணவரும் பிடிவாதமாக போகக் கூடாது என்று கூறினார்.
இதையடுத்து அவர்களுக்குள் சண்டை சூடுபிடித்தது. கணவனும், மனைவியும் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டனர். ஒரு கட்டத்தில், தன் கையில் இருந்த பைகளை தூக்கி கணவர் மீது எறிந்தார் அந்தப் பெண். பதிலுக்கு அவரை கன்னத்தில் அறைந்தார் அவரது கணவர். இதனால் விமான நிலையமே பரபரப்பானது.
இந்த சண்டை இப்போதைக்கு ஓயாது என்று நினைத்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் குறுக்கே புகுந்து இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தி இரவு ஒன்பதரை மணியளவில் வெளியேற்றினர்.
இரு தரப்பும் சமாதானமாகாத நிலையில் தனித் தனி கார்களில் ஏறி பறந்தனர்.












Click it and Unblock the Notifications