டைனோசர் முட்டைகளை அழிக்கும் கிராமத்தினர்-24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் சமீபத்தில் கண்டுபிடித்த டைனோசர் முட்டைகளை கிராம மக்கள் அதன் மதிப்பு தெரியாமல் அழித்து வருவதாகவும், திருடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் அருகே செந்துறை என்ற கிராமத்தில் காவிரி நதியின் படுகையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் நூற்றுக்கணக்கான டைனோசர் முட்டைகளை கண்டுபிடித்தனர்.
சுமார் 2 கிமீ., பரப்பளவு கொண்ட பகுதியில் இவை எடுக்கப்பட்டது. இது தான் இந்தியாவிலே பெரிய அளவிலான டைனோசர் முட்டை கண்டுபிடிப்பாகும்.
கால்பந்து அளவுக்கு பெரிய முட்டைகளாக இருக்கும் இவை சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த முட்டைகளின் புகைப்படம் சர்வதேச டைனோசர் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு அவர்கள் இது டைனோசர் முட்டை தான் என்பதை உறுதி செய்தனர்.
இந்நிலையில் கிராம மக்கள் சிலர் அந்த பகுதியில் தோண்டி டைனோசர் முட்டைகளை எடுத்து வருகின்றனர். இதன் மதிப்பு தெரியாத அவர்கள் அவற்றை அழித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அரியலூர் எஸ்பி நஜ்மல் ஹூடா அப்பகுதியை சுற்று பார்வையிட்டார். பின்னர் அவர் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், இந்த இடம் பாதுகாக்கப்படும். இங்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மேலும் வருவாய் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கலெக்டரிடம் கேட்டு கொண்டுள்ளோம் என்றார்.