முருகன் தலங்களில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.
சூரபத்மன் அசுரகுல நாயகன். சூரபத்மனின் தொல்லைகள் அளவுக்கு மீறிய சமயத்தில், அவனுடைய ஆணவத்தை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று தேவர்கள் முருகப் பெருமானிடம் வேண்டுகோள் வைத்ததாகவும், முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கடற்கரையில், சூரபத்மனுடன் முருகப் பெருமான் போரிட்டு சூரனை வென்றதாகவும், முருகப்பெருமான் சூரபத்மனுடன் போரிட்டு வென்றதை கந்த சஷ்டி விரதமாக பக்தர்கள் மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபடுவதாகவும், சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதத்தை நிறைவேற்றியதாகவும் புராணங்களில் கூறப்பட்டு உள்ளன.
ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்குவது வழக்கம்.
அதன்படி இன்று திருச்செந்தூர் உள்ளிட்ட முருகப் பெருமானின் தலங்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. 23ம் தேதி வரை கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது.
6 நாட்கள் விரதம் இருந்து, கந்த சஷ்டி கவசம், கந்தபுராணம், சண்முக கவசம் என முருகன் திருப்பாடல்களை உள்ளம் உருக பாடி தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
சூரபத்மனை திருச்செந்தூர் கடற்கரையில் முருகப்பெருமான் வதம் செய்ததால், திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி விழா மிகச்சிறப்பாக கருதப்படுகிறது. விழாவையொட்டி 6 நாட்களும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் மட்டுமின்றி அந்தந்த ஊர்களில் உள்ள முருகன் சன்னதிகளிலும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, முருகனுக்கு லட்சார்ச்சனைக்கு ஏற்பாடு செய்து உள்ளனர். 23-ந் தேதி மாலையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
குன்றத்தூர் முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி தினசரி முருகருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.












Click it and Unblock the Notifications