சமூக சேவகி ஜெயா அருணாச்சலத்துக்கு விருது
சென்னை: மும்பையைச் சேர்ந்த ஜம்னாலால் பஜாஜ் பவுண்டேஷன் வழங்கும் ஜம்னாலால் பஜாஜ் விருது சென்னையைச் சேர்ந்த சமூக சேவகி ஜெயா அருணாச்சலம் உள்ளிட்ட நான்கு பேருக்குக் கிடைத்துள்ளது.
சமூக சேவை, அறிவியல் தொழில்நுட்பம், ஊரக வளர்ச்சி, பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றம் ஆகிய 4 துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது இந்த பவுண்டேஷன்
இந்த ஆண்டுக்கான ஜம்னாலால் பஜாஜ் விருதுக்கு சென்னையைச் சேர்ந்த சமூக சேவகி ஜெயா அருணாச்சலம் உள்பட 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ரூ.5 லட்சம் பரிசு, பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த விருது.
பெண்கள் முன்னேற்றத்திற்கு ஆற்றிய பணிகளுக்காக ஜெயா அருணாச்சலம் பஜாஜ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் இந்திய உழைக்கும் மகளிர் சங்கத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார்.
ஏழை பெண்களின் முன்னேற்றத்திற்காக அவர் செயல்படுத்திய நுண்கடன் திட்டம் ஏராளமான பெண்களின் வாழ்வில் ஒளியேற்றியது. இவர் ஏற்கனவே மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.
விருது வழங்கும் விழா மும்பையில் நவம்பர் 6-ந் தேதி நடைபெறுகிறது. முன்னாள் ஆளுநர் பி.சி.அலெக்சாண்டர் தலைமையில் நடைபெறும் விழாவில், ஹரித்வார் பதாஞ்சலி யோகபீடத்தைச் சேர்ந்த சுவாமி ராம்தேவ்ஜி மகாராஜ் விருதை வழங்குகிறார்.












Click it and Unblock the Notifications