திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம் - பக்தர்கள் அலைமோதல்
திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் 2ம் வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 18ம் தேதி தொடங்கியது. கோயில் வாளகத்தில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். நாளை சூர சம்ஹாரம் நடைபெறுகிறது.
கந்த சஷ்டி விழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நாளை மாலை கோயில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடக்கிறது.
இதையொட்டி நாளை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சகால அபிஷேகம் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
பின்னர் திருவாடுதுறை சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமானதும் சூரசம்ஹார விழாவிற்கு சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருள்கிறார்.
மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூரனை வதம் செய்து ஆணவம் அழியும் தத்தவத்தை உலகிற்கு உணர்த்தும் சூரசம்ஹார விழா நடக்கிறது.