சென்னை, மதுரை, திருச்சியிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள்
சென்னை: சபரிமலை சீசனையொட்டி மதுரை, சென்னை, திருச்சியிலிருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இயக்கவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஐயப்ப பக்த கோடிகளின் வசதியை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்வதற்கு தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் மற்றும் புதுவையில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கி வருகின்றது.
அதே போல் இந்த ஆண்டும் ஐயப்ப பக்த கோடிகள் பம்பை செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 6 பஸ்கள் கூடுதலாக உரிமம் பெற்று மொத்தம் 40 பஸ்கள் கீழ்க்கண்ட இடங்களில் இருந்து பம்பைக்கு 15-ந் தேதி முதல் ஜனவரி 20-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
சென்னை-பம்பை (வழி) குமுளி- 30 பஸ்கள், புதுவை-கடலூர்-பம்பை (வழி) குமுளி, திருச்சி-பம்பை (வழி) குமுளி, மதுரை- பம்பை (வழி) குமுளி, செங்கோட்டை-பம்பை (வழி) புனலூர்.
அனைத்து அரசு விரைவுப் போக்குவரத்து கழக ஓ.டி.ஆர்.எஸ். மூலம் இயங்கும் முன்பதிவு மையங்களில் பம்பை செல்லவும் திரும்ப வருவதற்கும் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.