9 மாதத்தில் தமிழிசை மூவர் மணி மண்டபம்- பரிதி தகவல்
சென்னை: தமிழிசை மூவர் எனப்படும் அருணாசல கவிராயர், மாரிமுத்து பிள்ளை, முத்து தாண்டவர் ஆகியோருக்கு சீர்காழியில் 9 மாதங்களில் மணி மண்டபம் கட்டி முடிக்கப்படும் என தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முதல்வர் கருணாநிதி உத்தரவின் பேரில் சீர்காழியில் தமிழிசை மூவர்களான அருணாசல கவிராயர், மாரிமுத்து பிள்ளை, முத்து தாண்டவர் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மணிமண்டபம் கட்டுவதற்கான இடம் மற்றும் வரைபடத்தை அமைச்சர் பரிதி இளம்வழுதி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், மணிமண்டபம் 419 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. 6 முதல் 9 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்.
எனவே, மணிமண்டபம் கட்டுவதற்கு திருத்திய மதிப்பீட்டினை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் உடனடியாக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.