ஆமை வேகத்துக்கு ஆனை விலையா?-கொதிக்கும் மக்கள்
திருப்பூர்: திருப்பூரில் இருந்து உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் மிக மெதுவாகச் செல்கின்றன. எக்ஸ்பிரஸ் பஸ் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், சாதாரண பஸ்கள் செல்லும் பயண நேரத்தையே இவை எடுத்துக்கொள்வதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் இருந்து கோவை, பொள்ளாச்சி, உடுமலை, சேலம், கரூர் உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. மற்ற நகரங்களோடு ஒப்பிடுகையில், திருப்பூரில் இருந்து சிறு நகரங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ் போக்குவரத்து மிகவும் குறைவு.
எனவே, வெளியூர் பயணிகள் வேறு வழியின்றி அரசு பஸ்களிலேயே பயணிக்க வேண்டியுள்ளது. பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், பணியாளர்களும் திருப்பூரில் பணிபுரிய வருகின்றனர்.
சாதாரண பஸ்களில், உடுமலை மற்றும் பொள்ளாச்சி செல்ல 100 நிமிடங்கள் ஆகும். ஆனால், எக்ஸ்பிரஸ் பஸ்களில் 80 நிமிடங்கள் மட்டுமே பயண நேரமாக இருக்க வேண்டும். இந்த காரணத்திற்காக, கூடுதல் கட்டணம் செலுத்த பயணிகள் தயாராக உள்ளனர்.
ஆனால், தற்போது ஏராளமாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பஸ்கள் உரிய நேரத்தில் செல்வதில்லை. பஸ்களின் தரத்திலும், என்ஜின் திறனிலும் எந்த மாற்றமும் செய்யாமல், பழைய பஸ்களின் பெயர் பலகையை மட்டும் மாற்றி எக்ஸ்பிரஸ் பஸ்கள் என்ற பெயரில் இயக்குவதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications