ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கு ஸ்டெம்செல் உதவும்- ஜப்பானிய விஞ்ஞானி
சென்னை: ரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க, ஆய்வகங்களில் உருவாக்கப்படும் ஸ்டெம் செல்கள் பெரிதும் உதவும் என்று ஜப்பானிய ஸ்டெம் செல் விஞ்ஞானி யூக்கியோ நகாமுரா கூறினார்.
ஜப்பானில் உள்ள ரிகேன் இன்ஸ்டிடியூட்டில் உயிரி வள மைய தலைவராக உள்ள யூக்கியோ, சென்னையில் நடைபெற்ற ஸ்டெம் செல் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அப்லாஸ்டிக் அனீமியா எனப்படும் சிவப்பு ரத்த அணு குறைபாட்டு பிரச்னைகள், தலசீமியா எனப்படும் ரத்த அழிவு போன்ற ரத்தப் புற்றுநோய் வகைகளுக்கு ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.
ஸ்டெம் செல் தொடர்பாக எழுந்து வரும் கலாச்சாரப் பிரச்னைகளை கருத்தில் கொண்டு, ஜப்பானிய விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களை சிறப்பு தொழில்நுட்பத்துடன் ஆய்வகங்களில் உருவாக்குகின்றனர்.
இந்த தொழில்நுட்பத்தில் மனித கரு முட்டைகளை பயன்படுத்துவதில்லை. எனவே எதிர்ப்புகள் இருக்காது.
இதனால், கூடிய விரைவில் இதுபோன்ற ஸ்டெம் செல்கள் ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் நிலை உருவாகும்' என்றார்.