மகளிர் இடஒதுக்கீடு கோரி 'லேடீஸ் ஸ்பெஷல்' நாடாளுமன்றம்
டெல்லி: மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, முழுக்கமுழுக்க பெண்களால் - பெண்களே - பெண்களுக்காக தேர்வு செய்யப்பட்ட மாதிரி நாடாளுமன்றக் கூட்டம் டெல்லியில் நடத்தப்பட்டது.
நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்காக சட்டம் கொண்டுவர எடுத்த முயற்சிகள் முழுமை பெறாமல் உள்ளன.
இந்நிலையில், டெல்லியில் முழுக்கமுழுக்க பெண்கள் மட்டுமே அங்கம் வகித்த, 'மாதிரி நாடாளுமன்றத்தை' கூட்டினர். தேசிய பெண்கள் கூட்டணி என்ற சமூக சேவை அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்தது.
வழக்கமாக நாடாளுமன்ற தேர்தல் நடப்பது போலவே நாடு முழுவதும் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளில் இருந்தும் ஏற்கனவே உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
முழுக்கமுழுக்க பெண்களால், பெண்களே, பெண்களுக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த 'லேடீஸ் ஸ்பெஷல்' நாடாளுமன்ற கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து சென்ற 32 பேர் உட்பட மொத்தம் 500 பேர் கலந்துகொண்டனர்.
இக் கூட்டம் 4 நாட்கள் நடந்தது. கலந்து கொண்ட உறுப்பினர்களை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என 2 பிரிவாக இருந்தனர்.
பிரதமர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களும் இருந்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் நீலவள்ளி நிதியமைச்சராகவும், ஷீலு விவசாய அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். காரசார விவாதங்களுக்கும் பஞ்சமில்லை.
நிஜ நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு மாதிரி சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.