87 வருடங்களாக மனமொத்து வாழ்ந்த தம்பதியை பிரித்த காலன்!
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் வசித்து வந்தவர் ஹன்சா தேவி. 103 வயதாகிறது இந்தப் பாட்டிக்கு. இவரது கணவர் பெயர் பியாரா சிங் (107). கணவன், மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு சரியான உதாரணமாக இந்தத் தம்பதிகள் விளங்கினர்.
கங்க்ரா மாவட்டத்தில் உள்ள பரோல் கிராமத்தில் இந்த தம்பதிகளின் வீடு உள்ளது. இந்தக் கிராமம் மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்து கிராமங்களிலும் ஹன்சா தேவி, பியாரா சிங் தம்பதி வெகு பிரபலம்.
இங்கு மட்டுமல்ல கின்னஸ் புத்தகத்திலும் கூட இவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. நூறாண்டுகளைக் கடந்த கணவன், மனைவி என்ற சாதனையுடன் வாழ்ந்து வந்தனர் ஹன்சா - பியாரா தம்பதியினர்.
இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியவே மாட்டார்களாம். எங்கு போனாலும் சேர்ந்தே போவார்களாம். இருவருக்கும் இடையே எந்த சண்டையும் வந்ததில்லையாம். அனுசரித்து நடந்து கொள்வதில் மட்டுமே இவர்களுக்குள் போட்டி வருமாம்.
சிங் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். ஹன்சா தேவியை 1922ம் ஆண்டு மணந்தார். அன்று முதல் இருவரும் சண்டை சச்சரவின்றி அன்போடும், அனுசரணையோடும் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஹன்சா தேவிக்கு உடல் நலம் சரியில்லை. வீட்டோடு முடங்கியிருந்தார். அவருக்கு ஆதரவாக எங்கும் செல்லாமல் பியாரா சிங்கும் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று ஹன்சா தேவி மரணமடைந்தார். இதன் மூலம் அவர்களின் 87 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
ஹன்சா தேவியின் மறைவை அறிந்து மக்கள் திரண்டனர். இறுதிச் சடங்கில் அவர்கள் கண்ணீருடன் கலந்து கொண்டனர். பியாரா சிங்குக்கு ஆறுதல் கூறினர்.
அக்டோபர் 7ம் தேதி தான் தனது கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக ஹன்சா தேவி கர்வா சாத் விரதம் அனுசரித்தாராம்.
கடந்த ஆண்டு இந்தப் பகுதிக்கு வந்த திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா, ஹன்சா தேவி, பியாரா சிங் குறித்துக் கேள்விப்பட்டு அவர்களை சந்தித்து பாராட்டி, ஆசிர்வதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.