கலிலியோவின் காணாமல்போன விரல்கள் மீட்பு- இத்தாலிய அருங்காட்சியம் தகவல்
கலிலியோ இறந்து 95 ஆண்டுகள் கழிந்த பின், 1737ம் ஆண்டில் அவரது உடலின் எஞ்சிய பாகங்கள், கல்லறையிலிருந்து மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மறுஅடக்கம் செய்யப்பட்டது.
அப்போது, சிலர் கலிலியோ மீதான ஆர்வமிகுதியால் கல்லறையிலிருந்த மூன்று விரல்கள் மற்றும் பற்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். அதில் ஒரு விரல் உடனடியாக மீட்கப்பட்டு புளோரன்சில் உள்ள அறிவியல் வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கலிலியோவின் இரண்டு விரல்கள் (பெரு விரலும், நடுவிரலும்) மற்றும் பற்களை மட்டும் இத்தாலியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் சொத்தாகக் கருதி வைத்திருந்தனர். இவை ஒரு குடுவையில் பத்திரப்படுத்தப்பட்டு, தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தினரிடம் இருந்து வந்தது.
ஒரு கட்டத்தில், பின்னாள் வந்த தலைமுறைக்கு இந்த குடுவையில் இருப்பது என்னவென்பது தெரியாமல் அவர்களாலேயே வெளி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டது. 1905ம் ஆண்டுவாக்கில் கலிலியோவின் இரண்டு விரல் மற்றும் பற்கள் காணாமல் போய்விட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் முடிவு செய்துவிட்டனர்.
இந்நிலையி்ல், சமீபத்தில் ஒரு ஏலத்தின் போது இக்குடுவையை கலைப்பொருள் சேகரிப்பாளர் ஒருவர் வாங்கியுள்ளார். இதுபற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள அருங்காட்சியக இயக்குனரை அவர் அணுகியுள்ளார்.
18ம் நூற்றாண்டைச் சேர்ந்த அக்குடுவையின் வரலாற்றுப் பின்னணி மற்றும் விற்பனை ஆவணங்கள் ஆகியவற்றை அருங்காட்சிய ஆய்வாளர்கள் ஆய்வு செய்து பார்த்ததில் அது கலிலியோவினுடையது என தெரியவந்தது. மேலும் குடுவையில் கலிலியோவின் உருவம் பொறித்த அடையாளமும் கிடைத்துள்ளது.
அடுத்த சில மாதங்களில் இவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று அருங்காட்சிய இயக்குனர் கலூஸி தெரிவித்துள்ளார்.