துபாயில் ரிதம் ஈவன்ட்ஸின் மாபெரும் இசை விழா
துபாய்: துபாய் ரிதம் ஈவன்ட்ஸ் அமைப்பின் ஏற்பாட்டின் பேரில் அட்டகாசமான, அபாரமான இசை விழா நடைபெற்து.
டிசம்பர் 11ம் தேதி துபாய், இந்தியன் உயர் நிலைப் பள்ளி, ஷேக் ரஷீத் ஆடிட்டோரியத்தில் இந்த விழா நடைபெற்றது.
மாலை 4.30 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ரிதம் ஈவன்ட்ஸ் சார்பில் அதன் இயக்குநரும், துபாய் தமிழ்ச் சங்க நிறுவனர் மற்றும் காப்பாளருமான சந்திரா ரவி, துபாய் தமிழ்ச் சங்க நிறுவனர் மற்றும் இயக்குநர் சபேசன் ஆகியோரின் ஏற்பாட்டில், இந்த நிகழ்ச்சி நடந்தது.
15 வயதான நிவேதிதாவின் தலைமையில் சிறார்களின் நடனத்தோடு நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் திண்டுக்கல் லியோனி தலைமையில் மாபெரும் பட்டிமன்றம் நடைபெற்றது.
துபாயைச் சேர்ந்த பொற்செல்வி, ஜெசீலா ரியாஸ், கார்த்திக் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
பின்னர் தேனிசைத் தென்றல் தேவாவின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. கோலங்கள் புகழ் ஷியாம், பிரியா பிரகாஷ், பிரியதர்ஷினி, பிரகாஷ் ஆகிய கலைஞர்கள் இதில் கலந்து கொண்டு பாடல்களைப் பாடினர்.
நிகழ்ச்சியை ஆசிப் மீரான் தொகுத்து அளித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விரைவில் இந்த நிகழ்ச்சி ராஜ் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
துபாய் வாழ் தமிழ் மக்களுக்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அளிக்கும் சீரிய சேவையில் ரிதம் ஈவன்ட்ஸ் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.