தமிழச்சி தங்கபாண்டியனின் மஞ்சணத்தி'

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கடந்த 2 ஆண்டுகளாக பத்திரிகைகளில் வெளியிட்ட 70 கவிதைகளை தொகுத்து மஞ்சணத்தி' என்ற பெயரில் கவிதை புத்தகம் தயாரித்துள்ளார்.
இந்நூல் வெளியீட்டு விழா சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் குமாரராஜா முத்தையா அரங்கத்தில் நடைபெற்றது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் தாயார் ராஜாமணி தங்கபாண்டியன் பெற்றுக்கொண்டார்.
நூலை வெளியிட்டபின் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'தமிழச்சி தங்கபாண்டியன் விருதுநகரில் பிறந்து, மதுரையில் பட்டம் படித்து, சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக 12 ஆண்டுகள் திறமையாக பணியாற்றியுள்ளார்.
அவருக்கு, மகாகவி பாரதி விருது உள்பட பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. அவர் எழுதிய கவிதைகளின் சில வரிகள் கல்லூரி பாடத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.
அவர் முதல் முதலாக கவிதை படிக்க நேர்ந்ததே தந்தை தங்கபாண்டியனின் மறைவால் தான். தந்தையை இழந்த சோகம் தாங்க முடியாமல் முதல் முதலாக கவிதை எழுதி வெளியிட்டார்.
தமிழச்சி தங்கபாண்டியன் தி.மு.க மீது பற்று கொண்டவர். முதல்வர் கருணாநிதி மீது பற்றும், பாசமும் கொண்டவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை பெற்றவர்.
அவரது குடும்பமே கழக குடும்பம். தமிழச்சி தங்கபாண்டியன் அரசு பணியை விட்டார். அவர் தந்தை தங்கபாண்டியனும் அரசு பணியை ஒதுக்கிவிட்டுத்தான் அரசியலுக்கு வந்தார்.
தமிழச்சி தங்கபாண்டியன் வருங்காலத்தில் அரசியலில் சிறப்பான உச்ச நிலைக்கு செல்வார். ஒரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறார் என்று சொல்வது உண்டு.
ஆனால், தமிழச்சி தங்கபாண்டியன் என்ற பெண்ணுக்கு பின்னால் 2 ஆண்கள் துணை நிற்கிறார்கள். ஒன்று அவரது தந்தை மறைந்த தங்கபாண்டியன், மற்றொன்று அவருடைய வாழ்க்கை துணைவர். எனவே, அவரது கணவரை நான் பாராட்டுகிறேன்' என்றார்.
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், 'தமிழ்நாட்டில் இளைஞர்களுக்காக, மாணவர்களுக்காக, கிராமத்து பெண்களின் முன்னேற்றத்திற்காக, அவர்கள் சுயமரியாதையுடன் வாழ துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பணிகள் எண்ணில் அடங்காது.
அவர் 60 மணி நேரம் நின்றுகொண்டே நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, அவரது கவனத்திற்கு வரும் ஏராளமான மக்களுக்கு குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு, அவர்களை படிக்கவைக்க பல உதவிகளை செய்து வருகிறார்.
மக்களின் அடிப்படை பிரச்னைகளை உணர்ந்து உதவி செய்து வருகிறார். எதிர்கால தமிழகம் உங்கள் பின்னால் நடைபோடும்' என்றார்.
விழாவில் எழுத்தாளர் சிவசங்கரியும் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது: துணை முதல்வரிடம் தமிழ்நாட்டு மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். காரணம் அவர் மக்களுக்கு நிறைய தொண்டு ஆற்றிவருகிறார்.
தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக அவர் ஆக்குவார் என்று நம்புகிறேன், அவரை பாராட்டுகிறேன் என்றார்.
விழாவில், மு.க.ஸ்டாலினின் மனைவி சாந்தா ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, நடிகர் சிவகுமார், கவிஞர்கள் வாலி, அப்துல் ரகுமான், இயக்குனர்கள் வசந்த், பாலு மகேந்திரா, நக்கீரன் கோபால், மு.க.தமிழரசு உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை நடிகை சொர்ணமால்யா தொகுத்து வழங்கினார்.












Click it and Unblock the Notifications