துபாயில் தமிழ்த்தேர் கார்த்திகை மாத ‘இசையும் பாடலும்’ சிறப்பிதழ் வெளியீடு
வானலை வளர்தமிழ் அமைப்பின் 'தமிழ்த்தேர்" கார்த்திகை மாத இதழ் வெளியீடும் கவியரங்கம் துபாய் அல்கோஸில் புதிதாய்த் துவங்கப்பெற்ற 'சிவ்ஸ்டார்" பவனில் சிறப்பாக நடைபெற்றது.ஆனிஷாவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்வில் முதலாவதாக 'இசையும் பாடலும் கவியரங்கம்" காவிரிமைந்தன் மற்றும் தண்டலம் டி.எம்.பழநி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கவிஞர்களும் தங்கள் கவிதைகளை சிறப்புற வாசித்தளித்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினர்.
பின்னர் 'இசையும் பாடலும்" சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் ஆன்மீக இலக்கிய சொற்பொழிவாளர் வேணுகோபால் அவர்கள் மதுரையிலிருந்து வந்திருந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மற்றும் பாலசுப்ரமணியன் (பாலா), துபாயில் துவங்கப்பட்ட தமிழரின் முதல் பல்பொருள் அங்காடி எனப் பெயர்பெற்ற 'நாடார் கடை" உரிமையாளர் நாடார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பெற்று கௌரவிக்கப்பட்டார்கள்.
வேணுகோபால் இசை, பாடல் என்று ஆன்மிகம் கலந்து உரையாற்றி, கவியரங்கத்தில் பங்குகொண்ட கவிஞர்களை வாழ்த்தினார்.
'சங்கமம்" தொலைக்காட்சி நிர்வாக இயக்குனரும் வானலை வளர்தமிழின் புரவலருமான கலையன்பன் 'சிகரத்தை நோக்கி..." எனும் நிகழ்ச்சிக்காக சிறந்த கவிஞர்கள் ஐவரைத் தெரிவு செய்தார்.
பின்னர் முகவை காளிதாஸ் இயற்றி, ஜாக்கிர் அவர்களால் மெட்டமைக்கப்பட்ட 'வானலை வளர்தமிழ்" மற்றும் 'தமிழ்த்தேர்" பற்றிய பாடலை ஜாக்கிர் தன் இனிமையான குரலில் பாடி அனைவரையும் மெய்மறக்கச் செய்தார்.
அடுத்த மார்கழி மாதத் தலைப்பு 'கடலும் படகும்" என்ற அறிவிப்புடன், நன்றியுரையை நர்கிஸ் அவர்கள் வழங்க நிகழ்வு இனிதே நிறைவுக்கு வந்தது. நிகழ்ச்சியை கிளியனூர் இஸ்மத் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வினை வானலை வளர்தமிழ் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். தலைவர் கோவிந்தராஜ் அவர்களும் விழாவில் பங்குகொண்டு சிறப்பு அழைப்பாளர்களை கௌரவித்தார்.