மறைந்த போப் 2ம் ஜான் பாலுக்கு புனிதர் பட்டம்
மறைந்த போப்பாண்டவர் 2ம் ஜான் பால் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியவர் என்பதால் அவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அவர் நிகழ்த்திய அற்புதங்களை விளக்கி ஆதாரங்களுடன் கோரிக்கை மனுக்களும் குவிந்தன.
இவை அனைத்தும் வாடிகன் போப் சபையில் பரிசீலிக்கப்பட்டன. இதன் இறுதியில் போப்பாண்டவர் ஜான் பால் அற்புதங்கள் நிகழ்த்தியது உண்மைதான் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போப்பாண்டவர் 2ம் ஜான் பால் உண்மையான கிறிஸ்துவ நம்பிக்கையுடன் வாழ்ந்தவர், அற்புதங்களை அவர் புரிந்தது உண்மைதான். எனவே அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது என்று போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் முறைப்படி அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் போப்பாண்டவர் ஜான் பாலுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. கடந்த 2005ம் ஆண்டு போப்பாண்டவர் 2ம் ஜான் பால் மரணமடைந்தார்.
போப்பாண்டவர் ஜான் பால் மரணமடைந்த ஒரு மாதத்திற்குப் பின்னர் 2005ம் ஆண்டு மே மாதம், 2ம் ஜான் பாலை புனிதராக அறிவிக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக்க உத்தரவிட்டார் போப் 16ம் பெனடிக்ட். வழக்கமாக இதுபோன்ற நடவடிக்கைகள் முடிவடைய குறைந்தது ஐந்து ஆண்டுகள் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
1978ம் ஆண்டு 2ம் ஜான் பால் போப்பாண்டவராக பொறுப்பேற்றார். இத்தாலியைச் சேர்ந்த முதல் போப் இவர்தான். அதன் பின்னர் கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் அவர் போப்பாண்டவராக இருந்தார். தற்போதைய உலகில் மிகப் பிரபலமான போப்பாண்டவராக அவர் விளங்கினார்.
அவர் போப்பாண்டவராக இருந்த கால கட்டத்தில்தான் கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் ஒழிந்தது. போப்பாண்டவர் 2ம் ஜான் பாலின் சொந்த நாடு போலந்து. அங்குதான் கம்யூனிசத்திற்கு எதிரான முதல் தீப்பொறி கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
1981ம் ஆண்டு போப்பாண்டவர் ஜான் பால் சுடப்பட்டார். ஆனால் படுகாயத்துடன் அவர் உயிர் தப்பினார். ஆனால் தன்னைச் சுட்டவரை மன்னித்து அவரை விட்டுவிடுமாறு கோரினார்.
கடந்த ஆண்டு போப்பாண்டவர் ஜான் பாலை புனிதராக அறிவிக்கும் நடவடிக்கைக் குழுவின் பொறுப்பாளரான மான்சிங்கர் ஸ்லாம்வோமிர் ஓடர், 2000 பக்கங்கள் கொண்ட புனிதராக அங்கீகரிக்கத் தேவையான அறிக்கையை முடித்தார். அதில் ஜான் பாலின் அற்புதங்களுக்கான ஆதாரங்கள் அனைத்தும் அடங்கியுள்ளது.
போப் ஜான் பால் நிகழ்த்திய அற்புதங்கள் தொடர்பாக பலரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். 47 வயதான பிரான்ஸைச் சேர்ந்த கன்னியாஸ்திரி மேரி சிமோன் பியரி பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதே நோய் போப்பாண்டவர் 2ம் ஜான் பாலுக்கும் இருந்தது.
போப்பாண்டவர் ஜான் பால் மரணமடைந்த 2 மாதத்தில் தனக்கு பர்கின்சன் நோய் முற்றிலும் மாயமாகி விட்டதாக கன்னியாஸ்திரி பியரி சாட்சியம் அளித்துள்ளார்.