இந்தியப் பெண்களை முத்தமிட கூடாது-இங்கிலாந்து
லண்டன்: இந்தியாவில் இருக்கும்போது இந்தியப் பண்பாட்டைக் கடைப்பிடியுங்கள். இந்தியப் பெண்களை முத்தமிடக் கூடாது. மாறாக கை கூப்பி நமஸ்தே என்று சொல்லிப் பழகுங்கள், கை குலுக்குவதைக் கூட தவிருங்கள் என்று தனது நாட்டவருக்கு இங்கிலாந்து இந்திய வர்த்தக கவுன்சில் அறிவுரை கூறியுள்ளது.
இந்தியாவில் தொழில் தொடங்கப் போகும் நிறுவனங்களுக்கான அறிவுரை இது.
இந்த வாரம் இது தொடர்பான ஒரு வகுப்பு ஒன்றையும் இந்த கவுன்சில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த வகுப்பில், பிரிமிங்காமைச் சுற்றி உள்ள பல்வேறு தொழில்நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அவர்களிடம், உங்களது வர்த்தகத்தை இந்தியாவில் மேற்கொள்ள முடிவு செயதால், நீங்கள் சில பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
பல இங்கிலாந்து நிறுவனங்களின் அதிகாரிகள், இந்தியாவுக்குப் போகும் போது இதில் பெரும் தவறுகள் செய்து விடுகிறார்கள்.
இந்தியாவின் பழக்க வழக்கம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை மனதில் கொள்ள வேண்டும்.
இன்று மேற்கத்திய நாடுகளில் பொருளாதாரம் வீழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் கிழக்கில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த பொருளாதார வளர்ச்சியை நாம் பயன்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு உள்ளது. கிழக்கத்திய நாடுகளில் நமது சந்தையை உருவாக்கிக் கொள்ள அருமையான வாய்ப்பு இது.
ஆனால் அந்தப் பிராந்தியத்தின் குணாதிசயங்கள் தெரியாமல் பலர் தவறு செய்து விடுகின்றனர்.
இங்கிலாந்து மக்களுக்கு இந்தியர்களின் பழக்க வழக்கம், மனப்பான்மை நன்கு தெரியும். காரணம், இங்கு பெருமளவிலான இந்தியர்கள் இருப்பதால் அவர்களுடன் பழகும் வாய்ப்பு அவர்களுக்கு அதிகம் உள்ளது.
ஆனால் இங்கிலாந்து நிறுவனங்களுக்கு இதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
எனவே இந்தியாவுக்குச் செல்ல விரும்பும் இங்கிலாந்து நிறுவனங்கள் அங்குள்ள சூழ்நிலையைப் பழகிக் கொள்ள வேண்டும். கலாச்சார உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்திய மக்களிடம் நீங்கள் நல்ல பெயரெடுக்க முடியும்.
இந்தியப் பெண்களை சந்திக்க நேர்ந்தால் இந்திய முறைப்படி நமஸ்தே என்று கை கூப்பி வணங்கப் பழகுங்கள். இங்கிலாந்து முறைப்படி முத்தம் கொடுப்பதைத் தவிருங்கள். கை குலுக்குவதிலும் கூட கவனம் தேவை என்று அந்த பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்பட்டது.












Click it and Unblock the Notifications