அவல நிலையில் 50 வயது செங்கோட்டை நூலகம்
செங்கோட்டை: செங்கோட்டை பொது நூலகம் 50 ஆண்டு கால பழமை வாய்ந்தது. இந்த நூலகக் கட்டிடம் காலத்தால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.
நூலகக் கட்டிடத்தின் பழுது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எந்த நேரம் என்னவாகுமோ என்ற பயத்தில் தான் வாசகர்கள் படிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அமைதியாக படிக்கமுடியாமல் வாசகர்கள் அவதிப்படுகின்றனர்.
கடந்த மாதம் குற்றாலம் வந்த சட்டப்பேரவை குழுவினரிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து அக்குழுவினர் செங்கோட்டை நூலகத்தை ஆய்வு செய்தனர். உடனடியாக நூலகக் கட்டிடத்தை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு மாற்ற மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்தனர்.
ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் நூலகக் கட்டிடம் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இதைப் பார்க்கும் நூலக நேயர்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
மழையில் நனைந்த ஏராளமான புத்தகங்களை உலர வைத்து வருகின்றனர். எனவே, நூலகக் கட்டிடத்தை உடனடியாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்.