தமிழர்களுக்கு உதவுங்கள்: வேன்கூவர் தமிழ்ச் சங்கத் தலைவர் ராஜா பேச்சு
கோவை: தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு உதவுங்கள் என்று கனடா நாட்டின் வேன்கூவர் தமிழ்ச் சங்கத் தலைவர் ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகத் தமிழர் பேரவை சார்பில் கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:
கனடா நாட்டின் வேன்கூவர் பகுதியில் சுமார் 15,000 தமிழர்கள் உள்ளனர். அவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது தான் வேன்கூவர் தமிழ்ச் சங்கம்.
கனடாவுக்கு வரும் தமிழர்களுக்கு வழிகாட்டுதல், தங்கிப் பணியாற்றும் தமிழர்களின் நலனுக்காக பாடுபடுவது போன்றவற்றை முன்வைத்து இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
கனடாவில் ஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்ச ஊதியமாக 8 டாலர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை 10 டாலராக உயர்த்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கனடாவில் வளரும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழர் பண்பாடு, கலாசாரம் பற்றி முழுமையாகத் தெரிவதில்லை. இது குறித்து அவர்களுக்கு விளக்கும் வகையில் வாரந்தோறும் கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
எந்த நாட்டில் இருந்தாலும் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தமிழனும், தமிழ் சமுதாயமும் முன்னேறி விடும் என்றார்.
உலகத் தமிழர் பேரவை தலைவர் இரா.சனார்த்தனன், அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழக வேந்தர் சண்முகானந்தன், முன்னாள் எம்.பி. கோவை ராமநாதன், கவிஞர் இளங்கீரனார் உள்பட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications