கோலாகல நிறைவு விழாவுடன் சென்னை சங்கமம் நிறைவு

சென்னை சங்கமம் என்ற பெயரில் கலை, பண்பாட்டு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் கனிமொழி தலைமையில் தமிழ் மையமும், தமிழக சுற்றுலாத்துறையும் இணைந்து நடத்தி வருகின்றன.
இந்த ஆண்டு, ஜனவரி 10-ந் தேதி, சென்னை சங்கமம் தொடங்கியது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் உள்பட 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
சென்னை சங்கமம் 4-ம் ஆண்டு நிகழ்ச்சிகளை, சென்னை தீவுத் திடலில் முதல்வசர் கருணாநிதி கடந்த 10-ந் தேதி தொடங்கி வைத்தார்.
சென்னையில் 17 இடங்களில் சங்கமம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு வகையான கிராமப்புற கலை நிகழ்ச்சிகள், கர்நாடக இசைக் கச்சேரிகள் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றிருந்தன.
இதன் நிறைவு விழா நேற்று எலியட்ஸ் கடற்கரையில் திறந்தவெளி மேடையில் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. இதனை, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், குடும்பத்தோடு வந்து கூடி ரசித்தனர். நிகழ்ச்சி நடைபெற்றபோது, கடற்கரையில் குழந்தைகளும், பெண்களும் கூட நடனம் ஆடினார்கள்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கனிமொழி பேசுகையில்,
கிராமிய கலைஞர்களுக்கு ஊக்கம் தருவதற்காக இங்கு கடல் அலை போல் வந்திருக்கக்கூடிய சென்னை ரசிகர்களுக்கு நன்றி. இந்த ஆண்டு சங்கமத்தின் இறுதிவிழா இந்த மேடையில் நடந்து கொண்டிருக்கிறது.
சென்னை சங்கமம் சார்பில் ஒவ்வொருவரையும் வணங்கி நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ரசிகர்கள், கைத்தட்டல் இல்லை என்றால் எந்த கலைஞராலும் மேடை ஏற முடியாது. எந்த கலையும் வளர முடியாது. உங்கள் ஆதரவு, கரவொலிதான் கலைகள் வெற்றி பெற காரணம்.
இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு எத்தனையோ பேர் உதவியாக இருந்தார்கள். தமிழக முதல்வருக்கு முதல் நன்றி. அவரது ஊக்கம், உறுதுணைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
சுற்றுலா துறை, சென்னை மாநகராட்சிக்கு எனது நன்றி. அமைச்சர் சுரேஷ்ராஜன், இங்கு வந்திருக்கும் சென்னை மேயர் சுப்பிரமணியன், அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, தங்கம்தென்னரசு, பூங்கோதை ஆகியோருக்கும் நன்றி.
இந்த நிகழ்ச்சிக்காக, பெரிய அளவில் நாங்கள் விளம்பரம் கொடுப்பதில்லை. ஆனால் பத்திரிகைகள் இந்நிகழ்ச்சியை மக்களிடம் சிறப்பாக கொண்டு போய் சேர்த்தார்கள். அவர்கள் இல்லையெனில் வெற்றி இல்லை. அனைவருக்கும் நன்றி. அடுத்த ஆண்டில், சங்கமத்தின் 5-வது ஆண்டு நிகழ்ச்சியில் சந்திப்போம்.
இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு கோரிக்கை. நீங்கள் நேசிக்கும் சென்னை நகரத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று உறுதி ஏற்க வேண்டும். இன்று முதல் குப்பைகளை கண்ட இடத்தில் போடமாட்டோம் என்று உறுதி பூணவேண்டும் என்றார்.
பின்னர் சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவை குறிக்கும் வகையில் வாண வேடிக்கைக்கு நடைபெற்றது. அரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
வான வேடிக்கை ஏற்படுத்திய ஒளியின் காரணமாக, எலியட்ஸ் கடற்கரை, இரவு நேரத்திலும் பகல் போல் ஒளிவெள்ளமாக காட்சி அளித்தது.












Click it and Unblock the Notifications