துபாய் தமிழ்ச் சங்க பொங்கல் விழாவில் துரைமுருகன்
விழாவிற்கு சங்க தலைவி ஜெயந்தி சுரேஷ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் தனது உரையில், கடல் கடந்து வாழ்ந்து வரும் தமிழர்களாகிய நீங்கள் தமிழ் மண்ணின் பெருமை, மொழி, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை மறவாமல் அதனை நிலைநாட்டிக் கொண்டிருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த நிலை தமிழன் வாழ்ந்து வரும் அனைத்து நாடுகளிலும் கிடையாது. மலேசியா, சிங்கப்பூர் போன்று வளைகுடா நாடுகளிலும் தமிழன் தன் அடையாளத்தோடு வாழ்ந்து வருவது பெரிதும் மகிழ்வளிக்கிறது.
தமிழன் தனது தொலைந்துவிட்ட முகவரியை வெளிச்சத்துக்கு கொண்டு வர முயற்சித்தவர் பேரறிஞர் அண்ணா. அதை நிறைவேற்றி வரும் வகையில் காரியம் ஆற்றி வருபவர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்.
உலகில் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ். அத்தகைய பழமையான மொழியான தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத்தரக் காரணமாக இருந்தவர் முதல்வர் கருணாநிதி. அதற்கு துணை நின்றவர் அன்னை சோனியா காந்தி.
தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற்றதையடுத்து சோனியா அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், தமிழுக்கு இத்தகைய தகுதியும், பெருமையும் கிடைக்க டாக்டர் கலைஞராகிய நீங்களும், உங்களது கட்சியுமே என்று குறிப்பிட்டுள்ளார். இது வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும் என மேலும் கூறியுள்ளார்.
செம்மொழி அந்தஸ்தை தமிழ் பெற 108 ஆண்டுகளுக்கு முன்னர் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர். அதை நிறைவேற்றியர் டாக்டர் கலைஞர் என்றார் துரைமுருகன்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் பேசுகையில், சிறுபான்மை மக்களின் உணர்வுகளைப் புரிந்து செயல்படுபவர் முதல்வர் கருணாநிதி.
கேரளா மற்றும் சில மாநிலங்களில் இருப்பது போல் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனுக்கென தனி அமைச்சகத்தை தமிழக முதல்வர் ஏற்படுத்தித் தர வேண்டும். அதற்கு அமைச்சர் துரைமுருகன் உதவி புரிந்திட வேண்டும்.
மேலும் நீண்ட நெடிய காலம் வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு வயதான நிலையில் தாயகம் திரும்புவோர் மத்தியில் தன்னம்பிக்கை ஏற்படுத்திடும் வகையில் அவர்கள் சுயதொழில் செய்திட ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
முன்னதாக பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. துபாய் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும ஹெச்.ஆர்.எம். எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான், ஸ்டார் மெட்ரோ ஹோட்டல் மேலாளர் பிரைன் நாயர் மற்றும் புரவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பொருளாளர் கீதா கிருஷ்ணன் நன்றி கூறினார். மீரா கிரி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.













Click it and Unblock the Notifications