செம்மொழி மாநாடு: உலகளாவிய கவிதைப்போட்டி - முதல் பரிசு ரூ. 1 லட்சம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி உலகம் தழுவிய அளவில் பிரமாண்ட கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெல்வோருக்கு ரூ. 1 லட்சம் பரிசு அளிக்கப்படவுள்ளது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான, பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக் குழுவின் 2-வது ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
இதில் கவியரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, உலக அளவிலான கவிதைப் போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்காக உலக அளவில் விளம்பரம் செய்யப்படும். போட்டி தலைப்பு குறித்த அறிவிப்பும் பின்னர் வெளியிடப்படும்.
முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். 2வது பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், ஆறுதல் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தலைப்பில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
தற்போது பல்கலைக்கழக அளவில் இப்போட்டிகள் நடந்து வருகின்றன. மாநில அளவிலான போட்டியை மார்ச் முதல் வாரத்தில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைப்பார்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும் என்றார் பொன்முடி.












Click it and Unblock the Notifications