திசநாயகத்துக்கு சிறந்த வெளிநாட்டு செய்தியாளர் விருது - 'பிரிட்டிஷ் பிரஸ்' வழங்கியது
லண்டன்: இலங்கை அரசால் சிறை தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள தமிழ் பத்திரிகையாளர் ஜெ.எஸ்.திசநாயகத்துக்கு 'பிரிட்டிஷ் பிரஸ்' விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது, இந்தாண்டின் சிறந்த வெளிநாட்டு செய்தியாளர் என்ற முறையில் திசநாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இன ஆதிக்க வன்முறைகளுக்கு எதிராக தனது இணைய இதழில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வெளியிட்டு வந்த திசநாயகத்தை இலங்கை அரசு இனக்கலகத்தை தூண்டுவதாகக் கூறி கடந்த 2008ம் ஆண்டு கைது செய்தது.
தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு இருபது ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற திசநாயகம், பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் கடந்த ஜனவரி மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பிரிட்டன் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சிறந்த வெளிநாட்டு செய்தியாளருக்கான விருதுக்கு திசநாயகம் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் உள்ள கிராஸ்னோவர் ஹோட்டலில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது.
திசநாயகம் குறித்து 'பிரிட்டிஷ் பிரஸ்' குறிப்பிடுகையில், 'செய்தி சேகரிப்பதில் மிகுந்த சிக்கல்களும், இன்னல்களும் கொண்ட இலங்கை சூழலில், ஒடுக்குமுறைகளுக்கும், இடர்பாடுகளுக்கும் இடையே துணிச்சலாக உண்மை செய்திகளை உலகுக்கு எடுத்து சொன்னவர் திசநாயகம்.
அவர் தந்த செய்திகள், பிரிட்டன் பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்தன' எனக் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications