மண்டல பூஜை : சபரிமலை பாதுகாப்பு பணியில் தமிழக போலீஸ்!
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு வரும் தமிழக பக்தர்களுக்கு உதவ இந்த ஆண்டு 90 தமிழக போலீசார் அடங்கிய குழு சபரி மலைக்குச் சென்றுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜையை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த ஆண்டு வரலாறு காணாத அளவு கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சபரி்மலையில் அதிரடிப் படை கமாண்டோ போலீசார் உள்பட 1500க்கும் மேற்பட்ட கேரள போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதையடுத்து அவர்களுக்கு உதவி செய்வதற்காக தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர். இதற்காக இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 90 போலீசார் அடங்கிய குழு நேற்று முன்தினம் சபரிமலைக்கு வந்தனர்.
இது குறித்து தென்மண்டல கூடுதல் டிஐஜி சந்திரசேகரன் கூறுகையில்,
"முதல் முறையாக இந்த அளவு சீருடை அணிந்த தமிழக போலீசார் சபரிமலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழக பக்தர்களுக்கு உதவுவார்கள். மேலும், தமிழக குற்றவாளிகள் யாரும் வருகிறார்களா என்றும் கண்காணி்ப்பர். தமிழக போலீசார் சன்னிதானம் முதல் மரக்கூட்டம் வரை பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்," என்றார்.