25 ஆண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்ட இலங்கை வில்பட்டு தேசியப் பூங்கா
இனப் போர் காரணமாக வில்பட்டு உள்ளிட்ட தேசியப் பூங்காக்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது போர் ஓய்ந்திருப்பதால் மீண்டும் தேசியப் பூங்காக்களை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது வில்பட்டு பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
1905ம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது வில்பட்டு பூங்கா. பின்னர் 1938ம் ஆண்டு தேசியப் பூங்காவாக தரம் உயர்த்தப்பட்டது. இலங்கையிலேயே மிகப் பெரிய தேசியப் பூங்கா இதுதான்.
1985ம் ஆண்டு இங்கு 23 வனத்துறை அதிகாரிகள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர். இதையடுத்து பூங்கா மூடப்பட்டது. கடந்த மாதம் இந்தப் பூங்காவை மீண்டும் திறந்துள்ளனர்.
இதுகுறித்து இலங்கை அமைச்சர் படாளி சம்பிகா ரணவக்க கூறுகையில், வில்பட்டு பூங்காவையும் சேர்த்து தற்போது அனைத்துப் பூங்காக்களும் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்பட்டுள்ளது. என்றார்.
கொழும்பிலிருந்து 190 கிலோமீட்டர் தொலைவில் வில்பட்டு பூங்கா அமைந்துள்ளது. இங்கு 30 அரிய வகை உயிரினங்கள் உள்ளன. 1,31,693 ஹெக்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது வில்பட்டு பூங்கா.
இந்தப் பூங்கா அமைந்துள்ள பகுதி வறட்சியான பகுதியாக இருந்தாலும், பூங்காவுக்குள் மட்டும் ஆண்டு தோறும் 1000 மில்லி மீட்டர் மழை பெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இங்கு சராசரி வெப்ப நிலையே 27.2 டிகிரி செல்சிஷயஸ்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.