லண்டன் தமிழ்ச் சங்க பொன்விழா
லண்டன் தமிழ்ச் சங்கம் தனது ஐம்பதாம் ஆண்டு விழாவை "லண்டன் தமிழ்ச் சங்க பொன்விழா" என்று சிறப்பாக கொண்டாட பாரெங்கும் பரவியுள்ள தமிழ் ன்றோர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
லண்டன் நியூ ஹாம் டவுன் ஹாலில் ஏப்ரல் 24ம் தேதி பொன்விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தமிழின் தொன்மை மற்றும் இன உணர்வை இளையோரிடம் விதைக்கும் வகையில் பல்வேறு கருத்தாழம் மிகுந்த கருத்தரங்குகள் இவ்விழாவில் நடத்தப்பட்டன.
சிறியோர் முதல் பெரியோர் வரை வயது வித்தியாசமின்றி கலைநிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக வழங்கி பார்வையாளர்களின் கைத்தட்டலை அள்ளி சென்றனர்.
தமிழ் பள்ளி மாணக்கர்கள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடி விழாவை துவக்கி வைத்தனர். தமிழ் சங்கத்தை சேர்ந்த பெரியவர்களால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு தமிழ்ப் பள்ளி மாணவிகள் ஒருங்கிணைந்து பரதம் சிறப்பாக ஆடி கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தனர்.
நியூஹாம் மேயர் சர். ராபின்வேல்ஸ், ஈஸ்ட் ஹாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் டிம்ஸ் மற்றும் பிரிட்டனின் பல கட்சிப் பிரமுகர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பிரிட்டன் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் பெருந்தகைகள் பெருந்திரளாக நியூஹாம் டவுன் ஹால் பகுதியில் பொன்விழாவிற்காக குழுமினர். விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் லண்டன் தமிழ் சங்க நிர்வாகிகளால் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.
விழாவையொட்டி பொன்விழா மலரை தமிழ் சங்க நிர்வாகிகள் வெளியிட இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரும், நியூ ஹாம் மேயரும் பெற்றுக் கொண்டனர்.
அழிந்து வரும் தொன்மையான தமிழ் கலைகளாம் கரகம், ஒயிலாட்டம் போன்றவற்றை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் பள்ளி மாணவிகள் ஆடிய கரகாட்டத்திற்கு பார்வையாளர்களின் கரகோஷம் விண்ணை எட்டியது.
மாற்றோர் கலைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் நடைப்பெற்ற பஞ்சாபி இசையான "தோலு" மேளத்தை தமிழ் இளையோர்கள் இசைத்து பார்வையாளர்களையும் ஆட வைத்தனர்.
விழாவின் இறுதியில் சிறப்பாக பணிபுரிந்த தமிழ் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.













Click it and Unblock the Notifications