பழைய சட்டசபை மண்டபத்தில் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவன நூலகம்
சென்னை: புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய சட்டசபை மண்டபத்தில், செம்மொழி மத்திய ஆய்வு நிறுவன நூலகம் அமையவுள்ளது.
தற்போது சென்னை சேப்பாக்கம் பாலாறு இல்லத்தில் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவன நூலகம் செயல்பட்டு வருகிறது. தமிழ் மொழி குறித்தும், முனைவர் பட்டத்துக்கும் ஆய்வு செய்வோர் உள்ளிட்ட பலரும் அந்த நூலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
விரைவில் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகம் மற்றும் சட்டப் பேரவைச் செயலகம் ஆகியவை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய தலைமைச் செயலகத்துக்கு மாற இருக்கிறது. இதையடுத்து பழைய சட்டசபை மண்டபத்திற்கு செம்மொழி நூலகம் இடம் பெயருகிறது. இதற்கான உத்தரவை சட்டப் பேரவைச் செயலாளர் எம்.செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:
சென்னை சேப்பாக்கம் பாலாறு இல்லத்தில் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நூலகம் செயல்பட போதுமான இட வசதி இல்லை.
எனவே, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழ்நாடு சட்டப் பேரவை மண்டபம் மற்றும் அதன் வளாகத்தை நூலகத்துக்கு இடஒதுக்கீடு செய்யுமாறு செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனத்திடம் இருந்து கோரிக்கை எழுந்தது.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. பேரவையின் 13-வது கூட்டத் தொடர் மார்ச் 19-ல் தொடங்கி மே 14-ல் முடிந்தது.
இந்த நிலையில், புதிய சட்டப் பேரவைச் செயலகத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை சட்டப் பேரவையின் குளிர்கால கூட்டத் தொடருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத் தொடர் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. கூட்டத் தொடருக்குள் சட்டப் பேரவைச் செயலகத்தின் அனைத்து பிரிவுகளும் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டப வளாகத்தில் இருந்து புதிய சட்டப் பேரவை வளாகத்துக்கு இடம் மாற்றம் செய்யப்படும்.
இந்த இடமாற்றம் நிகழ்ந்த பிறகு, செம்மொழி மத்திய ஆய்வு நிறுவன நூலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப் பேரவை மண்டபம் மற்றும் அதன் வளாகத்துக்கு மாற்றப்படும்.
செம்மொழி நூலகத்தை மாற்றும் வகையில் தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறைக்கு பழைய சட்டப் பேரவை மண்டபம் மற்றும் அதன் வளாகம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கு பொதுத் துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.