மெக்காவில் உலகிலேயே மிகப் பெரிய கடிகாரம்
இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில், மிக உயரமான ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. புர்ஜ் துபாய் கட்டடத்தை விட, உயரத்தில் இந்த ஓட்டல் 36 அடி மட்டுமே குறைவு. எனினும், இந்த ஓட்டலின் உச்சியில் வைக்கப்பட இருக்கும் கடிகாரம், உலகின் மிகப் பெரிய கடிகாரம் என்ற பெருமையைப் பெற உள்ளது.
மெக்கா கிளாக் டவர் ராயல் ஓட்டல் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓட்டலைச் சுற்றி, ஏழு உயரமான கட்டடங்கள் உள்ளன. லண்டன் பிக்பென் கடிகாரத்தை விட 4.7 மடங்கு பெரிய கடிகாரம், இந்த கட்டடத்தின் உச்சியில் வைக்கப்பட உள்ளது.
இந்த ஓட்டலின் மொத்த உயரம் 1591 அடி. மொத்தம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் இந்த ஓட்டல் கட்டப்பட்டுள்ளது. புனித நகரமான மெக்காவில் மிகவும் ஆடம்பர, அதிக கட்டணம் கொண்ட ஓட்டல் இதுதான்.
இந்த ஓட்டலில், 1005 அறைகள் உள்ளன. அதில் தங்கி இருப்பவர்கள் பயணிக்க, 76 லிப்ட்கள் உள்ளன.
ஓட்டலின் இன்னொரு பகுதியில், இரண்டு ராயல் ஓட்டல்கள், ஐந்து கோல்டன் ஓட்டல்கள் உருவாக உள்ளன.
அந்த ஓட்டல் அறைகள், கிட்டத்தட்ட அரண்மனை போல இருக்கும் என, இந்த ஓட்டல்களை நிர்வகிக்க இருக்கும் உலகப் பிரசித்தி பெற்ற, பெயர்மன்ட் ஓட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த மாதம் ஓட்டல் திறக்கப்பட உள்ளது. ஜூலை மாதம் முதல், இந்த ஓட்டலின் உச்சியில் உள்ள கடிகாரம் இயங்கத் துவங்கும். ஜெர்மனியில் தயாராகும் இந்த கடிகாரம் 147 அடி அகலம், 141 அடி உயரம் கொண்டது.
கட்டடத்தின் நான்கு பக்கங்களிலும், இந்த கடிகாரம் இருக்கும். ஹஜ் நேரத்தில் மட்டும் மெக்காவிற்கு 40 லட்சம் பேர் வருகின்றனர்; மற்ற மாதங்களில் பல லட்சம் பேர் வருகின்றனர். எனவே, இந்த ஓட்டலுக்கு, எப்போதும் கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications