ராக்கெட், ஏவுகணையை விட செயற்கை கால்கள் தயாரித்ததே மாபெரும் சாதனை: கலாம்
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்புவிழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அப்துல் கலாம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
முன்னதாக அப்துல் கலாம் நிகழ்த்திய பட்டமளிப்பு விழா உரை:
நானும், எனது குழுவினரும் எஸ்.எல்.வி-3 ராக்கெட் மற்றும் அக்னி ஏவுகணையை விண்ணில் செலுத்திய போதும், பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியபோதும் மகிழ்ச்சி கலந்த பெருமிதம் அடைந்தோம்.
அந்த மகிழ்ச்சியைவிட ஊனமுற்ற குழந்தைகளுக்கு குறைந்த எடையில் செயற்கை கால்கள் தயாரித்து தான் மனதிற்கு நிம்மதியையும், திருப்தியையும் அளித்தது. முன்பெல்லாம் ஊனமுற்ற குழந்தைகள் 4 கிலோ எடை உள்ள செயற்கை கால்களைத்தான் பயன்படுத்த வேண்டி இருந்தது. அந்த பிஞ்சு கால்கள் இவ்வளவு கனமான செயற்கை கால்களுடன் நடந்த கொடுமையை நானே நேரில் பார்த்து துயரம் அடைந்தேன்.
இதையடுத்து 4 கிலோவுக்கு பதிலாக வெறும் 400 கிராமில் செயற்கை கால்களை தயாரித்துக்கொடுத்தது தான் நான் செய்த சாதனைகளில் பெருமகிழ்ச்சி அளிப்பது. பட்டம் பெற்ற மருத்துவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என்றார் கலாம்.
முன்னதாக மற்றொரு நிகழ்ச்சியில்கலாம் பேசுகையில்,
நம் நாடு முன்னேறிய நாட்டு நிலைமையை அடையும் வழியான நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற நாம் கடுமையாக உழைக்க வேண்டும். நம் நாட்டில் அனைத்து வளங்களும் உண்டு. ஆனால், நம்மிடம் இல்லாதது தன்னம்பிக்கை தான்.
இளைஞர்கள் நம் நாட்டின் தூண்கள் ஆவர். எனவே, அவர்களுக்கு நமபிக்கை அளிப்பதன் மூலம் தான் நம கனவுகள் நனவாகும் என்று அவர் கூறினார்.