திருப்பதியில் தமிழக அரசு சார்பில் விருந்தினர் மாளிகை கட்ட பக்தர்கள் கோரிக்கை
திருப்பதி: திருப்பதியில் தமிழக அரசின் சார்பில் விருந்தினர் மாளிகை கட்ட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்ணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தமிழக பக்தர்கள்.
திருப்பதியில் ஆந்திராவை தவிர்த்து கர்நாடகா அரசின் விருந்தினர் மாளிகை உள்ளது. அன்மையில் புதுச்சேரி அரசு திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் இடம் கேட்டு விருந்தினர் மாளிகை கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசும் திருப்பதியில் விருந்தினர் மாளிகை கட்ட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக பக்தர்கள் தங்க இடமில்லாமல் பல சமயம் சாமியை தரிசிக்காமலேயே திரும்பிச் சென்றதும் உண்டு. இந்த பிரச்சனை குறித்து திருப்பதியைச் சேர்ந்த பிரஜா காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் நாரா முனிச்சந்திரா தமிழக அறநிலயத்துறைக்கும், முதலமைச்சருக்கும் கோரிக்கை மனு அண்மையில் அனுப்பியிருந்தார்.
இந்த மனுவிற்கு தமிழக அரசு பதிலளித்தது. அதில் திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் விருந்தினர் மாளிகை கட்டுவதற்காக 1 ஏக்கர் நிலம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.