ஷார்ஜாவில் நகரத்தார் சங்கம் சார்பில் நகைச்சுவை மாலை
ஷார்ஜா: ஷார்ஜாவில் நகரத்தார் சங்கத்தின் சார்பில் 09.07.2010 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற 128 ஆவது கூட்டம் நகைச்சுவை மாலையாக மலர்ந்தது.
துவக்கமாக விசாலாட்சி நடராஜன் இறைவணக்கம் பாடினார். செல்வி சுபஸ்ரீ மணிகண்டன் திருக்குறள் வாசித்தார்.
நகரத்தார் சங்க தலைவர் வி. அழகப்பன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் நகரத்தார் சங்கம் மேற்கொண்டு வரும் சமுதாய மற்றும் கல்விப் பணிகள் குறித்து விவரித்தார். அப்பணிகளுக்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.
கவிதை நேரம் நிகழ்வில் அரசவைக் கவிஞர் கல்லல் தியாகராசன் கவிதை வாசித்தார். அதனைத் தொடர்ந்து குணா மற்றும் சுரேஷ் குழுவினரின் நகைச்சுவை மாலை உறுப்பினர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. ஜோஸ், ஜீனா மற்றும் சௌம்யலட்சுமி ஆகியோர் பாடல்கள் பாடினர். உறுப்பினர்களும் நகைச்சுவையினை பகிர்ந்து கொண்டனர்.
உறுப்பினர்கள் ரமேஷ் மற்றும் தெய்வா ஆகியோர் தலைமையில் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு வேடிக்கை வினோத நிகழ்வுகள் நடைபெற்றன. இதற்கு நடுவர்களாக முருகப்பன், அழகப்பன் மற்றும் வள்ளியப்பன் ஆகியோர் இருந்தனர்.
செட்டிநாட்டு மண்வாசனை கதைகள் எனும் நூல் மணிகண்டன் அவர்களது மகனின் மூன்றாவது பிறந்த நாளையொட்டி வழங்கப்பட்டது. புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். கமிட்டி உறுப்பினர் மணிகண்டன் நன்றி கூறினார். சுவையான செட்டிநாடு உணவுக்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது.












Click it and Unblock the Notifications