நான்கு கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைச் செல்வம் விருது
சென்னை: தமிழக அரசின் கலைச் செல்வம் விருது பெறும் கலைஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
கவின் கலைகளான ஓவியம், சிற்பம் பதிப்போவியம் ஆகிய கலைகளை வளர்க்கவும், பாதுகாக்கவும் பரப்பவும் இக்கலைகளில் ஈடுபட்டுள்ள படைப்பாளர்களை ஊக்குவிக்கவும், தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு ஒவ்வொரு ஆண்டும் மரபு வழி கலைஞர் ஒருவருக்கும் நவீனப்பாணிப் பிரிவு கலைஞர் ஒருவருக்கும் கலைச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கிறது.
இவ்விருது 2002ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை வழங்கப்படவில்லை. கடந்த 2008ம் ஆண்டு இவ்விருது 6 மரபுவழி கலைஞர்களுக்கும் 6 நவீனப்பாணிப் கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டது.
2008 2009 மற்றும் 2009 2010 ஆம் ஆண்டுகளுக்கு மரபு வழி மற்றும் நவீன பாணி கலைப் பிரிவுகளை சார்ந்த புகழ் பெற்ற வல்லுநர்களுக்கு கலைச் செம்மல் விருது வழங்க, கலை பண்பாட்டுத் துறை ஆணையர் தலைமையில், சென்னை மற்றும் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியின் முதல்வர்கள், மாமல்லபுரம் அரசு கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி முதல்வர் மற்றும் நவீன பாணி ஓவியக் கலைஞர் திரு எம்.டி.ராஸ்கி, மருது ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழு 20.07.2010 அன்று கூடி தங்கள் பரிந்துரையினை அரசுக்கு அனுப்பியது. இப்பரிந்துரையினை முதல்வர் கருணாநிதி ஏற்று கலைஞர்களை தேர்வு செய்து ஆணையிட்டுள்ளார்.
கலைச் செம்மல் விருது 2008 2009:
சி. தட்சிணாமூர்த்தி: இவர் நவீனபாணி ஓவியங்கள் குறித்து, இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் பல கண்காட்சிகள் நடத்தியதுடன் 1986ம் ஆண்டு தேசிய லலித்கலா அகாடமியின் விருது பெற்றதுடன் மாநிலஅளவில் பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார்.
கே. தட்சிணாமூர்த்தி: இவர் மரபு வழி பிரிவில் கட்டட கலைத் துறையில் திறன் பெற்றவர். இந்தியா மற்றும் அயல் நாடுகளிலுள்ள திருக்கோயில்களின் பணிகளை மேற்கொண்ட இவருக்கு பல்வேறு விருதுகள் இந்திய மட்டுமன்றி சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் விருதுகள் பெற்று கௌரவிக்கப்பட்டார்.
கலைச் செம்மல் விருது 2009 2010:
ஆர்.பி. பாஸ்கரன்: இவர் நவீனபாணி ஓவியங்கள் குறித்து, இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் பல கண்காட்சிகள் நடத்தியதுடன் 1982ம் ஆண்டு தேசிய லலித்கலா அகாடமியின் விருது பெற்றதுடன் மாநிலஅளவில் பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார்.
டி. பாஸ்கரன்: இவர் மரபு வழி பிரிவில் கட்டட கலைத் துறையில் திறன் பெற்றவர். இந்தியா மற்றும் அயல் நாடுகளிலுள்ள திருக்கோயில்களின் பணிகளை மேற்கொண்ட இவருக்கு பல்வேறு விருதுகள் இந்தியா மட்டுமன்றி அயர்லாந்து போன்ற நாடுகளிலிருந்தும் விருதுகள் பெற்று கௌரவிக்கப்பட்டார்.
இந்த ஓவியக் கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையில் தமிழக அரசின் கலைச் செம்மல் விருதுகள் வழங்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.