செய்துங்கநல்லூர் சிவன் கோவிலில் 15-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
செய்துங்கநல்லூர்: செய்துங்க நல்லூரில் உள்ள பழமை வாய்ந்த வியாக்கிர பரதீஸ்வரர்கோவிலில் 15ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செய்துங்கநல்லூரில் பழமை வாய்ந்த சிவகாமி சமேத வியாக்கிர பரதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது ஆன்மீக பேரவை சார்பில் திருப்பணி செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.
சிதிலமடைந்த கோபுரங்களை புதிதாக கட்டுதல், வள்ளி, தெயவானை சமேத சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி சிலைகள் அமைத்தல், கல் சுவர்களை சுத்த படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுவர்களை சுத்தப்படுத்தும்போது அதில் இருந்த சில கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சிவன், சிவகாமி அம்மன் கோவிலின் சுற்றுபுறத்தில் இந்த கல்வெட்டுகள் நெருக்கமாக உள்ளன. மேற்கூரையில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
இதை பேராசிரியர் வேல்முருகன் பார்வையிட்டு கூறியதாவது,
இந்த கல்வெட்டுகள் 15-ம் நூற்றாண்டை சேர்ந்தவை.செய்துங்கநல்லூர் முற்காலத்தில் செய்துநாட்டு சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது. இந்த கோவிலில் உள்ள சிவனின் பெயர் திருபுலீஸ்வரர் என்பதாகும்.
இந்த கோவிலுக்கு சொந்தமான நிலபுலன்கள் குறித்த விவரம் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன. ஆய்வாளர்கள் இங்கு ஆய்வு செய்தால் அரிய தகவல்கள் கிடைக்கும் என்று அவர் கூறினார்.