சபரிமலை 18ம் படிக்கு கண்ணாடி கூரையை தானமாக வழங்கும் தமிழக பக்தர்
திருவனந்தபுரம்: சபரிமலை 18ம் படிக்கு கண்ணாடி கூரையை தானமாக வழங்குகிறார் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18-ம் படிக்கு மேல் கூரை எதுவும் கிடையாது. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் பக்தர்கள் பதினெட்டாம் படி ஏற மிகவும் சிரமப்படுகின்றனர்.
மாத பூஜை நாட்களில் தினமும் இரவி்ல் இங்கு படி பூஜை நடப்பது வழக்கம். அப்போது தந்தரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் படிகளில் அமர்ந்துதான் பலமணி நேரம் பூஜை நடத்துவார்கள். மழைக் காலங்களில் நனையாமல் இருப்பதற்காக தற்காலிகமாக தார்ப்பாய் விரிக்கப்படும். ஆனாலும் பலத்த மழை பெய்யும்போது பூஜை செய்வதில் சிரமம் ஏற்படும்.
இதை தவிர்ப்பதற்காக பதினெட்டாம் படிக்கு மேல் நிரந்தரமாகக் கூரை அமைக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது.
இது குறித்து அறிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பக்தர் தனது செலவில் கூரை அமைத்துத் தருவதாக தேவசம் போர்டுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். பதினெட்டாம் படிக்கு மேல் கூரை அமைக்கும்போது வெளிச்சம் குறையக் கூடாது என்பதால் கண்ணாடியிலான கூரை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எளிதில் உடையாத உறுதி வாய்ந்த கண்ணாடி இதற்கு பயன்படுத்தப்படும்.
இது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கூறியதாவது,
பக்தர்களின் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக பதினெட்டாம் படிக்கு மேல் கண்ணாடியினால் ஆன கூரை அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் இதை நன்கொடையாக செய்து தர முன்வந்துள்ளார்.
இது குறித்து ஆலோசிப்பதற்காக பொறியாளர் ஒருவரை அவர் அழைத்து வந்தார். நன்கொடையாளரின் சம்மதம் கிடைத்த உடன் பணிகள் தொடங்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications