மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி 28-ம் தேதி காந்திய சிந்தனையாளர்கள் உண்ணாவிரதம்
நெல்லை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி நெல்லையில் வரும் 28-ம் தேதி காந்திய சிந்தனையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.
இதுகுறித்து காந்திஜி மன்றங்கள், தொண்டு நிறுவன அமைப்புகள், சர்வோதய அமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1969-ம் ஆண்டு மதுவிலக்கு தளர்த்தப்பட்டது முதல் ஆண்கள் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி வி்ட்டனர். மாணவர்களும், பெண்களும் கூட மது அருந்தத் தொடங்கி விட்டனர். அரசு அளிக்கும் நலத்திட்ட உதவிகளை குடியின் கொடுமையால் மக்கள் அனுபவிக்க முடியவில்லை. குடிப்பழக்கத்தால் குற்றங்கள், விபத்துகள் அதிகரித்துள்ளன.
குஜராத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. முதல்வர் கருணாநிதி அறிவித்தபடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி நெல்லையில் காந்திய சிந்தனையாளர்கள், காந்திஜி மன்றங்கள், தொண்டு நிறுவனங்கள், சர்வோதய அமைப்புகள் சார்பில் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் வரும் 28-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
இதில் அகில இந்திய சர்வோதய மண்டலத் தலைவர் சுகன்பரந்திஜி, கேரள மாநிலத் தலைவர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். பூரண மதுவிலக்கை ஆதரிக்கும் கட்சிக்கே வரும் தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்யப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications