குற்றாலத்தில் பொட்டு வைக்க துட்டு: ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சி
நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் சீசன். பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருந்து கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு சபரிமலை செல்பவர்கள் வழியில் குற்றாலம் வந்து நீராடி விட்டுச் செல்வார்கள்.
ஆனால் இந்த வருடம் குற்றால சிறப்பு நிலை பேரூராட்சி சிறப்பு ஏற்பாடு என்ற பெயரில் குளித்து வி்ட்டு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு சந்தனம், குங்குமம், திருநீர் வைப்பதற்கு காலை வேளையில் 1 நபருக்கு ரூ. 2-ம், இரவில் ரூ. 5-ம் வசூல் செய்ய சுமார் ரூ.4 லட்சத்திற்கு வெளிநபர்களுக்கு ஏலம் வி்ட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் எதற்கெடுத்தாலும் கட்டணம் என்ற நிலை உள்ள ஒரே பகுதி ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் குற்றாலம் தான். இங்கு பேரூராட்சி ஒருபக்கம், திருக்குற்றால நாதர் ஆலயத்தினர் ஒருபக்கம் என வசூல் வேட்டை நடத்தி வருவது பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட நிர்வாகமும், அரசும் உடனடியாக பொட்டு வைக்க துட்டு ஏலத்தை ரத்து செய்து இலவசமாக இவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













Click it and Unblock the Notifications