சீனாவில் 2.4 கோடி ஆண்கள் பிரம்மச்சாரியாகும் அபாயம்

சீனாவில் மக்கள்தொகை பெருக்கெடுப்பை கட்டுப்படுத்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற சட்டம் கடந்த 1979ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் பயனாக மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் பக்கவிளைவாக ஆண்-பெண் ஜோடி விகிதத்தில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
சட்டப்படி ஒரு குழந்தை தான் பெற வேண்டும் என்ற நிலையில் பெரும்பாலானவர்கள் ஆண் குழந்தைகளையே விரும்ப வேண்டியுள்ளது.
குறிப்பாக கிராமப் பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில்களில்
ஈடுபடுவோர், படிப்பறிவில் பின்தங்கியவர்கள் போன்றோர் மத்தியில் பெண் குழந்தைகள் நிராகரிக்கப்படும் போக்கு காணப்பட்டது.
குடும்பத்தில் முதலில் பெண் குழந்தை பிறந்தால் சிசுக்கொலை செய்வதும், கருவிலேயே கண்டறிந்து கருக்கொலை செய்வதும் சர்வசாதாரணமாக நடந்தது.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் சோதனைக்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும், கிராமப் புற மருத்துவமனைகளில் அதை முழுமையாக கண்காணிக்க அரசால் இயலவில்லை.
இதன் விளைவாக சீனாவில் ஆண்களோடு ஒப்பிடுகையில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களின் விகிதாச்சாரம் குறையத் தொடங்கியது.
கடந்த 1980களில் சீனாவில் 100 பெண்களுக்கு 108 ஆண்கள் என்ற விகிதம் காணப்பட்டது. 1990ல் இந்த இடைவெளி 100க்கு 111 என அதிகமானது.
படிப்படியாக உயர்ந்த இந்த விகிதாச்சார ஏற்றத்தாழ்வு, கடந்த 2006ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி 100 பெண்களுக்கு 120.4 ஆண்கள் என கூடிவிட்டது.
இதனால், சீனாவில் எல்லா ஆண்களுக்கும், பெண்கள் கிடைப்பது கேள்விக்குறியாகும் சூழல் உருவாகும் என அஞ்சப்படுகிறது.
படிப்பு, உத்தியோகம், வருமானம் போன்ற அம்சங்களால் வரன் கிடைக்கும் ஆண்களை கழித்துவிட்டுப் பார்த்தால், கிராமப்புறங்களில் பின்தங்கிய ஆண்மகன்களின் லௌகீக வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகும் என சமுக அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.
இதே நிலைமை நீடித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் இரண்டரை கோடி சீன ஆண்கள் குடும்பம் நடத்த பெண் துணை கிடைக்காமல் அவஸ்தைப்பட நேரிடும் என சீன சமூக அறிவியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அரசு உடனடியாக சுதாரித்துக்கொண்டு கொள்கை அடிப்படையிலான சில முடிவுகளை எடுக்கவேண்டிய நேரமிது என சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications