வேடந்தாங்கலில் சீசன் துவங்கியது: சிறப்பு பேருந்துகள் இயக்க மக்கள் கோரிக்கை
மதுராந்தகம்: தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வேடந்தாங்கலில் சீசன் துவங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு 10 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து வேடந்தாங்கலில் உள்ள ஏரி நிரம்பி உள்ளது. வேடந்தாங்கல் என்றால் நம் நினைவுக்கு வருவது பல வகைப் பறவைகள் தான். ஆண்டுதோறும் பறவைகள் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து இனப்பெருக்கம் செய்வது வழக்கம்.
தற்போது வேடந்தாங்கலின் தட்பவெட்ப நிலை பறவைகளின் இன்ப்பெருக்கத்திற்கு ஏற்றதாக உள்ளது. எனவே, சாம்பல் நாரை, நத்தை குத்தி நாரை, சாம்பல் நிற கூழைக்கடா, வெள்ளை அறிவான் மூக்கன், வள்ள நாரை, நீர் காகம், சிறிய வெள்ளை கொக்கு, பாம்புத்திரா உள்ளிட்ட 10 ஆயிரம் பறவைகள் இங்கு விஜயம் செய்துள்ளன.
வேடந்தாங்கல் அருகில் உள்ள கருக்கிலி ஏரியில் இருக்கும் நீர் நிலைகளுக்கும் பறவைகள் வந்துள்ளன. பறவைகளைக் கண்டு ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மதுராந்தகம், செங்கல்பட்டிலிருந்து ஒழுங்கான பேருந்து வசதி இல்லை. இதனால் சீசன் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கவும், போதிய வசதிகளைச் செய்து தரவும் பொது மக்கள் சுற்றுலாத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications