சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுபாடுகள்-போக்குவரத்து துறை
ஆலங்குளம்: சபரிமலை சீசன் நேரங்களில் ஏற்படும் விபத்துகளை குறைக்க மாநில எல்லையோர சோதனைச் சாவடி அலுவலர்கள் வாகன உரிமம் உள்பட வாகன சட்ட விதிகளுக்கு உட்பட்ட வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்து துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை முற்றிலும் குறைக்க போக்குவரத்து துறை புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதன்படி போக்குவரத்து ஆணையர் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகள், மாநில எல்லையோர சோதனைச் சாவடிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் லாரி போன்ற சரக்கு ஏற்றும் வாகனங்களில் செல்ல கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. இதனை போக்குவரத்து சோதனைச் சாவடி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டு்ம்.
மேலும் பக்தர்கள் செல்லும் பயணிகள் ஒப்பந்த வாகனங்களையும் கண்காணித்து அவை மோட்டார் வாகன சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளனவா என்றும், அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் செல்கிறார்களா என்றும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது