காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு உதவப் போவதாக ஜெயேந்திரர் அறிவிப்பு
ஜம்மு: காஷ்மீர்ப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சொந்த ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்து வாழ்ந்து வரும் காஷ்மீர் பண்டிட் குடும்பங்களுக்கு காஞ்சிபுரம் சங்கர மடம் உதவப் போவதாக ஜெயேந்திரர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காஷ்மீர் பண்டிட்கள் கடந்த காலங்களில் படும் பிரச்னைகளை சங்கர மடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இடம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்களின் குடும்பத்துக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப் போகிறோம்.
காஷ்மீர் பண்டிட்களுக்கு உதவுவதற்காக 3 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளோம். இக்குழுவினர் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்டவற்றை அளிக்கும். இதற்கென ஒரு கல்வி மையம் ஏற்படுத்தப்பட்டு அங்கு வேத முறைப்படி சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படும் என்றார் ஜெயேந்திரர்.
தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார் ஜெயேந்திரர். தனது பயணத்தை முடித்துக் கொண்டு நவம்பர் 2ம் தேதி தமிழகம் திரும்பவுள்ளாராம்.