மேலும் 500 நலிவடைந்த கலைஞர்களுக்கு நிதியுதவி
சென்னை: நிதியுதவி பெறத் தகுதிவாய்ந்த மேலும் 500 நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ. 1000 நிதியுதவி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கலை வளர்ச்சிக்குத் தொண்டு புரிவதையே தமது வாழ்வியல் கடமையாகக் கொண்டு வாழும் கலைஞர்கள், வயது முதுமை காரணமாகத் தொழில் வாய்ப்புகள் குறைந்து அல்லல்படும் சூழ்நிலையைப் போக்கிட நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த நிதியுதவி மாதம் 500 ரூபாய் என்பதை, 2006க்குப்பின் மாதம் 1000 ரூபாய் என முதல்வர் கருணாநிதி உயர்த்தி வழங்கினார்.
அத்துடன், 2006 முதல் ஆண்டுக்கு 500 பேர் வீதம் கடந்த மூன்றாண்டுகளில் 1500 நலிந்த கலைஞர்களுக்குப் புதிதாக உதவித்தொகை வழங்கிட முதல்வர் கருணாநிதியால் அனுமதி வழங்கப்பட்டு, அவர்கள் மாதம் 1000 ரூபாய் வீதம் நிதியுதவி பெற்றுப் பயனடைந்து வருகிறார்கள்.
2009-2010ஆம் நிதியாண்டில், இத்திட்டத்தின்கீழ் மேலும் 500 நலிந்த கலைஞர்களுக்கு, 1.8.2009 முதல் மாதம் 1000 ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கிட முதல்வர் கருணாநிதி 24.9.2009 அன்று ஆணை பிறப்பித்திருந்தார். அந்த ஆணையின்படி, நிதியுதவி பெறத் தகுதிவாய்ந்த 500 நலிந்த கலைஞர்களைத் தேர்வு செய்து கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின் காரணமாக, அரசுக்கு ஆண்டொன்றுக்கு 60 லட்ச ருபாய் கூடுதலாகச் செல வாகும். தற்போது புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 500 நலிந்த கலைஞர்களையும் சேர்த்து, இத்திட்டத்தின்கீழ், மொத்தம் 7 ஆயிரத்து 391 பேர் பயனடைகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications