5 நாள் விடுமுறை... திருப்பதியில் குவியும் தமிழக பக்தர்கள்!
திருமலை: கோவை நகரில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடப்பதையொட்டி அரசு அலுவலகங்கள் பள்ளிகளுக்கு 5 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான தமிழக பக்தர்கள் திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் குவிந்துள்ளனர்.
தமிழர்கள் கூட்டம் அலை மோதுவதால் திருமலையில் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
இலவச தரிசனத்திற்கு 8 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 5 மணி நேரத்துக்கு மேலும் ஆகிறது.
மொட்டை போடும் இடத்திலும் பக்தர்கள் 5 மணி நேரம் வரை காத்திருக்கும் அளவு கூட்டம் நிரம்பி வழிகிறது.
நேற்று திருப்பதி கோவிலில் சேஷ்டாபிஷேக விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சம்பளத்துடனான விடுமுறை என்பதால், 'இது இரண்டாவது விடுமுறை சீஸன்' என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினர்.
பிரதமர் வருகிறார்...
திருப்பதி கோவிலுக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி பிரதமர் மன்மோகன்சிங் வருகிறார். அவர் அன்று இரவு கோவிலில் தரிசனம் செய்கிறார்.
15-ந்தேதி அவர் மன்னவரத்தில் கட்டப்பட உள்ள 'பெல்' நிறுவன பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரேணிகுண்டா சர்வதேச விமான நிலையத்திற்கும் அன்றே அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் டெல்லி திரும்புகிறார்.