சென்னையில் 14 மொழிக் கவிஞர்கள் பங்கேற்கும் தேசிய கவியரங்கம்
சென்னையில் 14 மொழிகளைச் சேர்ந்த கவிஞர்கள் பங்கேற்கும் தேசியக் கவியரங்கம் இன்று தொடங்குகிறது.
வைரமுத்து தலைமை தாங்க, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் தொடங்கி வைக்கிறார்.
இந்திய வானொலி அறிவிப்பாளர்கள் அமைப்பின் சார்பில் பொன்னொளிர் பாரதம் என்ற பன்மொழி தேசிய கவியரங்கத்தை அகில இந்திய வானொலி நடத்துகிறது.
சென்னை வானொலி நிலைய அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தொடக்கவுரை ஆற்றுகிறார்.
வைரமுத்து தலைமையில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, காஷ்மீரி, குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி, வங்காளம், ராஜஸ்தானி, சிந்தி, உருது ஆகிய 14 இந்திய மொழிகளில் அந்தந்த மொழி கவிஞர்கள் கவிதை படிக்கிறார்கள்.
இந்திய வானொலி அறிவிப்பாளர் அமைப்பின் துணைத் தலைவர் வி.நல்லதம்பி வரவேற்புரையும், பொதுச் செயலாளர் டாக்டர் என்.முருகன் அறிமுக உரையும், இணைச் செயலாளர் எஸ்.எஸ்.பாண்டியன் நன்றி உரையும் ஆற்றுகின்றனர். அறிவிப்பாளர் சாந்தி தணிகாசலம் தொகுப்புரை ஆற்றுகிறார்.
அகில இந்திய வானொலியின் முன்னாள் துணை இயக்குனர் எம்.எஸ்.கோபால் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
நேயர்கள் முன்னிலையில் அரங்கேற்றப்படும் பன்மொழி கவிஞர்களின் கவிதைகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் உள்ள எல்லா வானொலிகளிலும் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன.












Click it and Unblock the Notifications