இந்தியாவின் பில்கேட்ஸ் அஜீம் பிரேம்ஜி! -ஃபோர்ப்ஸ் புகழாரம்

இந்திய ஐடி துறையில் ஜாம்பவான் நிறுவனங்களுள் ஒன்றான விப்ரோவின் நிறுவனர், தலைவர் அஜீம் பிரேம்ஜி. வர்த்தகத்துடன் நில்லாமல் பல சமூக நோக்குத் திட்டங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கெனவே அஜீம் பிரேம்ஜி பவுண்டேஷன் என்ற அமைப்பைத் துவங்கியுள்ளார். இந்த அமைப்பின் சார்பில் இந்தியாவின் 600 மாநிலங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி மைய ஆசிரியர்களுக்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் அளிக்கும் உலகத் தரமான பல்கலைக் கழகம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார், பிரேம்ஜி.
இந்தியப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சியாக, இதனை மேற்கொண்டுள்ளார் அவர். கிட்டத்தட்ட ரூ 450 கோடி செலவு பிடிக்கும் பணி இது. இதற்கான முழு செலவையும் அவரது பவுண்டேஷனே ஏற்கிறது.
அஜீம் பிரேம்ஜியின் இந்த அரிய பணியினை முன்னிலைப்படுத்தி கட்டுரை வெளியிட்டுள்ள ஃபோர்ப்ஸ், இந்தியாவிந் பில் கேட்ஸ் என்றால் அது அஜீம் பிரேம்ஜிதான் என அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எப்படி, தனது வருவாயின் ஒரு பகுதியை தொடர்ந்து சமூக நலப் பணிகள், மருத்துவ சேவைகள் போன்றவற்றுக்கு செலவிட்டு வருவதைப் போலவே, பிரேம்ஜியும் செய்து வருவதாக அக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் அஜீம் பிரேம்ஜியின் பேட்டியும் இடம்பெற்றுள்ளது.
அதில், தனது சொத்துக்களில் பெரும் பகுதியை இதுபோன்ற பணிகளுக்காகவே தந்துவிடப் போவதாகவும், தனது வாரிசுகளுக்கு ஒரு சிறு பகுதியைக் கொடுத்தாலே போதும் என்றும் பிரேம்ஜி குறிப்பிட்டுள்ளார்.
"என் காலத்திலேயே எனது சொத்துக்களின் பெரும் பகுதியை சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காகக் கொடுத்து விடப்போகிறேன். என்னுடைய சொத்துக்களின் ஒரு சிறு பகுதியை மட்டும் என் குழந்தைகளுக்குக் கொடுத்தால் போதும். பல தலைமுறைகளுக்கு அதுவே அவர்களுக்குத் திருப்தியாக இருக்கும்..." என்கிறார் பிரேம்ஜி.
17 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 28 வது பணக்காரராக இருக்கும் அஜீம் பிரேம்ஜிதான், ஆசிய அளவில் இந்த அளவு நற்பணிகளைச் செய்து வரும் ஒரே தொழிலதிபர் என ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications