மரங்கள் வெட்டப்பட்டதால் பொலிவிழந்த குற்றாலம் நீச்சல்குளம்
இயற்கை எழில் கொஞ்சும் பசுமை பூமி, கண்ணுக்கு விருந்தளிக்கும் மலை முகடுகள், அதன்மீது தள்ளாடி தவழ்ந்து வரும் கருமேகங்கள், ஓடி விளையாடும் சாரல் மழை துளிகள், ஆண்டில் 9 மாதங்களும் துள்ளி வரும் வெள்ளியருவி என புதிதாக மணமான பெண் போல பூத்துக்குலுங்குகிறது குளுகுளு குற்றாலம்.
குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் என ஆண்டுக்கு பல லட்சம் மக்கள் வந்து செல்லும் பகுதி.
ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவில் அரசு வளர்ச்சி திட்டங்களையும், நிதியையும் கொட்டி குவித்து வரும் இங்கு எப்போதும் கண்கெட்ட பின்பே சூரியநமஸ்காரம் என்பார்களே அது போலதான் வளர்ச்சி பணிகளும், அரசு திட்டங்களும் (மழைக் காலத்தில்) நடைபெரும்.
தற்போதும் இதே நிலைதான் குற்றாலத்தில் உள்ளது. அதிமுக ஆட்சியின் போது இங்கு வரும் உல்லாச பயணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக சிறுவர் பூங்கா, மிருக காட்சி சாலை, நீச்சல்குளம், மீன்பண்ணை போன்றவைகள் அமைக்கப்பட்டன.
ஆனால் இன்று இவை மூன்றும் மகா மோசமான நிலையில் உள்ளன. இவை மூன்றும் முற்றிலும் வீணாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்பு நீச்சல் குளத்தில் வெயில் என்பதையே காணமுடியாத அளவுக்கு ஏராளமான மரங்கள் அடர்த்தியாக இருந்தன. ஆனால் பேரூராட்சி நிர்வாகம் திடீரென நீச்சல் குளத்தில் இருந்த சில மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளது.
சமீபத்தில் குற்றாலம் வந்த மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து அதிகாரிகளிடம் கோபம் காட்டியுள்ளார். மரம் வெட்டிய நபர்களை எச்சரித்துள்ளார். அத்தோடு முடிந்தது, நடவடிக்கை இல்லை.
நீச்சல்குளம் தண்ணீர் இன்றியும், மரங்களின் நிழல் இன்றியும், மேற்கூரை இன்றியும் தற்போத பரிதாபத்தோடு பூட்டப்பட்டு கிடக்கிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுமக்கள் பொழுதுபோக்குமிடம் தற்போது பராமரிப்பின்றி பொலிவிழந்து படு மோசமானநிலையில் உள்ளது, சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications